பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


 ஜெயலலிதாவின்

‘நமது எம்.ஜி.ஆர்’

மக்கள் திலகத்தால் அரசியலுக்குள் நுழைந்த ஜெ. ஜெயலலிதா, தனது கட்சியின் கொள்கைப் பர்ப்புச் செயலாளரானார். எம்.ஜி.ஆர். அவரை மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். எம்.ஜி.ஆர். மரணமடைந்த பின்பு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். ‘நமது எம்.ஜி.ஆர்.’ என்ற நாளேட்டைத் துவக்கினார். கவிஞர் மணிமொழி அந்த நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, புலவர் என்.வி. கலைமணி அவருடன் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார்.

‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ என்ற அந்த நாளேட்டை நிறுவிய ஜெ. ஜெயலலிதா, இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சரானார். இன்றும் டாக்டர் நமது எம்.ஜி.ஆரை அவரது கொள்கைப் பரப்பும் நாளேடாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்.

மா. நடராசனின்

‘புதிய பார்வை, தமிழரசி’

அண்ணா தி.மு. கழகத்தை நடத்தி வரும் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் கணவர் எம். நடராசன்.

திராவிடர் இயக்கம் மாணவர் அணியிலே தொண்டாற்றி வந்த மா. நடராசன், தமிழ்நாடு அரசு ஊழியராகவும் பணி புரிந்தார். அவர் ‘தமிழரசி’ என்ற வார இதழுக்கு ‘அமுத சுரபி’ என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியரான விக்ரமன் அவர்களைப் பொறுப்பாசிரியராக்கி நடத்தி வந்தார். மா. நடராசன் அந்த வார இதழின் ஆசிரியராவார்.

கலைஞர் ‘குங்குமம்’ வார இதழில் எழுத்தாளர் சாவி. ஆசிரியராகவும், பாவை சந்திரன் என்பவர் துணை ஆசிரியராகவும் இருந்தார்கள். மா. நடராசன் அந்த பாவை. சந்திரனை அழைத்து, ‘புதிய பார்வை’ என்ற பத்திரிகைக்குப் பொறுப்பாசிரியராக்கி, புதிய பார்வையை நடத்தினார். அவை இரண்டும் நிறுத்தப்பட்டு விட்டன.