பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

புத்திரிகையாளர்களுக்கு திரு.வி.க. தமிழ்நடை அனுபவங்கள்!



இக்கேள்விகளுக்குப் பதில், ‘தமிழ் பெரியார்கள்’ என்ற நூலில் திரு.வி.க.வைப் பற்றி வ.ரா. அவர்கள் தீட்டிய சிறப்பான சொல்லோவியத்தில் ஓரளவு புலனாகிறது.

‘ஆண் பெண் தன்மைகளால் வீட்டுக்கும் நாட்டுக்கும் இடையே நசுக்குண்டு கரைந்து உருகுகின்றார் திரு.வி.க.’ என்று அவர் எடுத்துக்காட்டி, அறத்துக்கும் அரசியலுக்கும் சன்மார்க்கத்துக்கும் சமதர்மத்துக்கும், பரம்பரை வலுவுக்கும் நவீன தேவைகளுக்கும் இடையே எழும் மோதல்கள் பற்றி ஓயாத சிந்தனையில் மூழ்கிவிட்ட திரு.வி.க. ‘காரிய உலகில் சோபை இல்லாது போனார்’ என்று காரணம் காட்டுகிறார்.

மோன நிலையில் மூழ்கிய முனிவராகிவிட்ட திரு.வி.க. முழுமையான போராட்ட வீரராக விளங்க இயலவில்லை என்று வரலாற்று உண்மையைக் கூறுவது, அறம், அன்பு, அறிவு, தாய்மொழி, ஆர்வம், தாய்நாட்டுப் பற்று ஆகியவற்றின் உருவகமாய்த் திகழ்ந்த அவர், நாட்டுக்கும் தமிழுக்கும் ஆற்றிய கற்றொண்டுக்குக் களங்கம் விளைவிப்பதாகாது.

திரு.வி.க.வின் தமிழால் தேசியம் வளர்ந்தது; திரு.வி.க. வின் தேசியத்தால் தமிழ் தழைத்தது. ஆனால், திரு.வி.க. வளர்ச்சியின் முழுமையை அடைய இயலாமல் போயிற்று. அது அவருக்கு இழுக்கல்ல; நாட்டுக்கு இழப்பு. சண்டமாருதமாகவில்லையே என்று தென்றலைப் பழித்துப் பயனென்ன? தகிக்கும் கதிரவனாய் இல்லை என்பது தண்மதியின் தவறல்லவே. அமைதியான குளத்தில் ஆற்றுப் பெருக்கு இல்லையே என்று வருந்தலாமா? தேனின் இனிமை தாகத்தைத் தணிக்கவில்லையே என்று குறை கூறுவது பொருந்துமா? தம் வாழ்வாலும் வாய்மையாலும் தொண்டாலும் தூய்மையாலும் தமிழகத்துக்கு வாழ்வளித்த பெரியார்களில் ஒருவர் திரு.வி.க. தமிழுலகம் அவருக்கு தலை சாய்த்து வணங்குவதால், தலை நிமிர்ந்து நிற்கும் தகுதி பெற்றுத் திகழும்.

(குறிப்பு: இக்கட்டுரை ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்று கா. திரவியம், I.A.S. அவர்கள் எழுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி)