பக்கம்:இதழ்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருந்தவன்தான்’ எனும் ஆறுதலாய்ச் சமயங்களில் மாறிற்று. அவ்வாறுதலை ஒட்டி, கத்தரி வெய்யிலில் விட்டு விட்டு வீசும் தென்றல்போல் ஒரு இன்பம் மிளிராமல் இல்லை. இன்னும் ஏதோ ரஸாயனம், இந்த ஈடுபாடில் என்னுள் நேர்ந்து கொண்டிருந்தது. அதன் ஆராய்ச்சியைத்தான், இப்பக்கங்களில் நீங்கள் காண்கிறீர்கள் என்று கூறின் மிகையாகாது.

தழ்கள் பூவின் உள் ரகஸ்யத்துக்கு அரணாயும், வெளிக்கு அழகாயும், வண்டுகளை ஈர்க்கவும் அவை தேனைப் பருகுகையில் அவைகளை ஏந்தவும் அமைந்திருக்கிறனவே தவிர, இதழ்கள் பூவின் ஆதார பாகம் அல்ல என்று என் மருமாள் கூறுகிறாள். இதழ்களிலேயே அகஇதழ் புறஇதழ் எனப் பிரிவுகள் உண்டு என்று மேலும் விவரிக்கிறாள். காலையிலே திறந்து மாலையிலே குவியும் பூ, மணமற்று அழகுற்ற பூ, அழகிலாது மணம் நிறைந்த பூ, பூப்பதே தெளியாத பூ, ஒரு குடம் தண்ணி வார்த்து ஒரே பூ, ஒரே குடம் தண்ணி வார்த்து ஒரு பூ, பறிக்க இயலாத பூ, உதிர்ந்த பூ, பாறை மேல் பூ, பாலையில் பூ, குடலை நிறையக் குலுக்கிக் குலுக்கிப் பூ, நெருங்கினாலே நடுங்கிவிடும் பூ, காகிதப் பூ, ஆடும் பூ, சூடும் பூ, சூடாத பூ—இன்னும் அடுக்கிக்கொண்டே போகிறாள்; நான் உள் சுருங்குகிறேன்.

நேற்றுப்போல் இருக்கிறது; சரியாய் ஒரு வயதில் என்னிடம் வந்து, என் இருண்ட நேரங்களின் துணை வெளிச்சமாய். அவ்வெளிச்சத்திலேயே நான் படிக்கும் பாடமாயும் இருந்து, வளர்ந்து, மணந்து, இப்போது இரு குழந்தைகளுக்கு தானே தாயாய் விளங்குகிறாள். என் கண்ணெதிரிலேயே கருவாகி, உருவாகி, பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, இப்பொழுது தானே ஒரு இல்லத்தின் கிழத்தியாகி—அன்று நான் ஆபிஸிலிருந்து வரும்போது வாசற்படியிலேயே முழங்காலைக் கட்டித் தொங்கிக்கொண்டு அப்படித் தொங்கிய படியே, அவளை நடையோடு இழுத்துக்கொண்டு, நான் உள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/6&oldid=1394123" இலிருந்து மீள்விக்கப்பட்டது