பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

காலக் கதை சொல்லும் கலைச் செல்வங்களைத் தரிசித்து, தமிழர்களுக்கு அந்தக் காட்சிகளை வழங்கிய பெருமை திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களையே சாரும். ஒரு நிறுவனம் ஆற்ற வேண்டிய பணியை, தனி ஒருவராக செய்திருப்பது மிகவும் போற்றுதற்குரியது.

கலைக் கோயில்களைக் காண வேங்கடம் முதல் குமரி வரை' எனத் தொடங்கி பாரதமெங்கணும் அவர் பாத்திரை செய்தார். முகிலைத் தொடும் கோபுரங்களைக் காட்டினார்; அவைகளைக் கட்டிய உயர்ந்த உள்ளங்களின் வரலாற்றைச் சொன்னார். பேசும் சிற்பங்களையும், எழில் ஓவியங்களையும் காண்பித்தார். அதன் சீர்மிகும் சிறப்பை எல்லாம் கூறினார். கலையழகை, கவிதை நயத்துடன் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் ஏராளம்.

'இந்தியக் கலைச் செல்வம்' என்ற இந்நூல் கலைப் பண்பை விரிக்கிறது. கலையழகு கொலுவிருக்கும் எழிற் கோலங்களைக் காட்டுகிறது. இந்நூலை வெளியிட வாய்ப்பு நல்கிய திருமதி. ராஜேஸ்வரி நடராஜன் அவர்க ளுக்கு நன்றி. தமிழகம் இதனை விரும்பி வரவேற்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

2.10.70

மாசிலாமணி

சென்னை - 17

கலைஞன் பதிப்பகம்