பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கிறது.. கைத்தொழில் பெருகியிருக்கின்றது. கட்டிட நிர்மாணத்தில் கைதேர்ந்த தச்சர்கள், சிற்பிகள், வர்ண வேலைக்காரர்களுக்கு எல்லாம் தக்க ஆதரவாய் கோயில்கள் இருந்திருக்கின்றன. அதனால் பரம்பரை வேலைக்காரர்கள் பெருகி இருக்கிறார்கள். மேலும், கோயில்கள் கலை நிலையங்களாக, கலைக் கூடங்களாக வளர்ந்திருக்கின்றன. இசையும் நடனமும் கோயில்களின் நித்யோத்சவத்தில் பங்கு பெற்றிருக்கின்றன. கல்விச் சாலைகள், பொருட்காட்சிச் சாலைகள் எல்லாம் கோயிலுக்குள்ளேயே அமைத்திருக்கிறார்கள். வியாக்யான மண்டபம், வியாகர்ண மண்டபம், சரஸ்வதி மண்டபங்கள் முதலியன கோயில்களுக்கு உள்ளேயே நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன. தென்னார்க்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும், செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக்கூடலிலும் பெரிய பெரிய கலாசாலைகளே நடந்திருக்கின்றன. எண்ணாயிரம் கோயிலில் ஒரு சமஸ்கிருத பாடசாலை நடத்த முந்நூறு ஏக்கர் நிலம் மான்யமாக விடப்பட்டிருக்கிறது. 340 மாணவர்களுக்கு தங்க இடமும், உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாக வழங்கப்பட்டிருக்கிறது. திருமுக்கூடல் பள்ளி இத்தனைச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கவில்லை என்றாலும் 60 பிள்ளைகள் படிக்க உதவியாக இருந்திருக்கிறது. ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், மற்ற பணிகளையும் செய்து ஊதியம் பெற்றிருக்கின்றனர். இப்படியே பல இடங்களில் பல கல்விச் சாலைகள் கோயில்களின் ஆதரவிலேயே நடந்து வந்திருக்கின்றன.

152