பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

பாண்டிய மன்னர்களுக்குப் பின்புதான் தமிழ் நாட்டின் பெரும் பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்கள் சிலரும் இக்கலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் பெரிய பெரிய கோபுரங்களை எழுப்புவதிலும், பெரிய பெரிய பிரகாரங்களை அமைப்பதிலும், நூற்றுக்கால் ஆயிரக்கால் மண்டபங்கள் அமைப்பதிலுமே அக்கறை காட்டியவர்கள். மதுரை மீனாட்சி கோயிலின் சுவர் ஓவியங்கள் எல்லாம் இவர்கள் காலத்தவையே.

இன்று இந்த ஓவியக் கலை கோயில்களில் சிறப்பாக விளங்கக் காணோம். திருப்பணி நடக்கும்போது வண்ணங்களை வாரி இறைக்கக் கற்றிருக்கிறார்களே தவிர வேறு சிறப்பு மிக்க சித்திரங்கள் தீட்டக் கற்றுக் கொள்ளவில்லை. வண்ணத்தையும் சுண்ணத்தையம் கடந்து எண்ணத்தையும் புகுத்தி உருவாக்கிய சித்திரங்களே தமிழனது ஓவியக் கலையை உயர்த்துவதாகும். அந்த ஓவியங்களே நமது. கோயில்களில் உருவாகியிருக்கின்றன. கோயில் வளர்த்த கலைகளில் சிறப்பானதொரு பங்கு இந்த ஓவியக் கலைக்கும் உண்டு என்று தெரிந்து கொண்டோமானால் அது போதும் நமக்கு.

184