பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

இத்தனையும் என் சொந்தக் கற்பனை அல்ல. இப்படி நண்பரது மனைவிக்குப் பொட்டிடும் கலையில் உள்ள நுணுக்கத்தைச் சொல்லிக் கொடுக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது ஒரு சிலை. அந்தச் சிலையை நேரில் காண விரும்பினால், நேரே ஸ்ரீரங்கத்திற்குச் செல்லுங்கள். தென் பக்கத்தில் உள்ள ரங்க விலாசத்தில் இடது பக்கமாக நுழைந்து அங்குள்ள வேனுகோபாலன் சந்நிதியைக் கண்டுபிடியுங்கள். அந்த வேணுகோபாலனைக் கூடக் கொஞ்சம் மறந்து அவன் கோயில் வெளிப் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். தெற்குப் பிரகாரத்தில் உள்ள ஒரு மாடக் குழியிலே ஒரு பெண்ணைக் காண்பீர்கள். அவள் பொட்டிட்டுக் கொள்ளும் நிலையில். ஆம். நாம் நண்பர் மனைவிக்குச் சொல்லிக் கொடுத்த அதே நிலையில் நிற்பதைக் காண்பீர்கள். ஒருவேளை நீங்கள் அழுத்தமான சைவராயிருந்து, ஸ்ரீரங்கநாதனோ அல்லது வேணுகோபாலனோ இருக்கும் திசை நோக்கிக் கூட திரும்ப மாட்டோமே என்றாலும் பரவாயில்லை. நீங்கள் தொழுகின்ற அந்தக் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கே போங்கள். தொலை தூரத்திலிருக்கும் வட காசிக்கல்ல. எங்கள் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள தென் காசிக்குத்தான். அங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தில் முன் மண்டபத்தில் மேற்கே பார்த்த தூண் ஒன்றில் இதேவிதமாக பொட்டிடும் பெண் ஒருத்தி இதே நிலையில் காட்சி கொடுப்பாள்.

இதையெல்லாம் கேட்டு நீங்கள் நினைப்பீர்கள். என்ன இவர் கதை அளக்கிறார் என்று. இந்தவிதமாக

70