பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


இந்த ஆராய்ச்சியால் கடல் நூல் வளர்வது மட்டுமன்றி, அதனோடு தொடர்புடைய நில இயல் நூல், நில அமைப்பு நூல், நில நூல், உயிர் நூல், வானிலை நூல் முதலிய அறிவுத் துறைகளும் வளரும் என்பது வெள்ளிடைமலை.

இந்தியக் கடலை முழுமையாக ஆராய்வதால் வானிலை அறிவும், தட்ப வெப்பநிலை அறிவும், சிறப்பாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. இதனால் நீண்ட எல்லை வானிலை முன்னறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க இயலும். இந்தியக் கடற்பகுதிகளைச் சூழ்ந்த நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அவற்றிற்கு அப்பாலும் வானிலை முன்னறிவிப்பைத் தெரிவிக்க இயலும், உலக வானிலை முன்னறிவிப்பைத் தெரிவிப்பதில் மற்றக் கடல்கள் போன்று இந்தியக் கடலும் சிறந்த இடத்தைப்பெறும்.

உலகின் புற வெளியான வான்வெளியை அறிந்த அளவுக்கு, அதன் அக வெளியான கடலை அறியவில்லை என்பது எல்லோரும் கூறும் ஒரு பொதுக்குறையாகும். இந்தக் குறை, உலக அளவில் தீவிரக் கூட்டு முயற்சியுடன் செய்யப்படும் இந்தியக் கடல் ஆராய்ச்சியினால் அறவே நீங்க வழியுண்டு என்று நாம் எதிர்பார்க்கலாம். அன்றியும், இந்த ஆராய்ச்சி மற்றப் பெருங்கடல்களை எதிர்காலத்தில் ஆராய்வதற்கும், முன் மாதிரியாகக் கொள்ளப்படலாம் என்றும் நாம் நம்பலாம்.