பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிலும், கிழக்கிலும் இந்தியப் பூமியில் இரண்டு துண்டுகள் வெட்டப்பெற்று, மேற்குப் பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான் என்ற இரு பகுதிகள் ஒரு ராஜ்யமாக அமைக்கப்பெற்றன. இரண்டு பகுதிகளும் நீங்கலாக எஞ்சியிருந்ததுதான் இந்தியா அல்லது பாரதம். இந்தப் பிரிவினை இந்தியாவின் பாதுகாப்பு முறையையே அடியோடு மாற்ற வேண்டிய நிலையை உண்டாக்கிவிட்டது. வடமேற்கில் முன்போல் கைபர் கணவாயைக் காக்கவேண்டிய பொறுப்பு நீங்கிவிட்டது. அந்தக் கணவாய் பாகிஸ்தானுக்கு உரியதாகி விட்டது. பாகிஸ்தானின் இரு பகுதிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள ஆயிரக்கணக்கான மைல் நீளமுள்ள எல்லைகளைப் பாதுகாக்கும் புதிய பொறுப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவுடன் நேசப்பான்மையோடு பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் முதலியவை செய்துகொள்வதாயிருந்தால், எல்லைப் பாதுகாப்பு சற்று எளிதாயிருந்திருக்கும். ஆனால் அவ்வாறில்லை. தோன்றும்போதே மதத்தை அடிப்படையாகக்கொண்டு பாகிஸ்தான் தனி இஸ்லாமிய நாடாகத் தோன்றிற்று. வேறு சில முஸ்லிம் நாடுகளுடன் நெருங்கிய உறவுகொண்டதோடு, மேலே நாடுகளின் இராணுவ முகாமிலும் அது சேர்ந்துள்ளது. இந்தியா எந்த முகாமிலும் சேராமல் நடுநிலை வகித்து வருகின்றது. இக்காரணங்களுக்கெல்லாம் மேலாக, விடுதலை பெற்ற ஒன்றரை மாதத்திற்குள்ளாகவே, காஷ்மீர் சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் பெரிய முரண்பாடும். பகைமையும், சண்டையும் தோன்றிப் பதினெட்டு ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றன.

பாகிஸ்தானின் மொத்தப் பரப்பு 3,64,737 சதுர மைல். 1961-இல் அதன் மொத்த ஜனத்தொகை 9,38, 12,000. நிலப்பரப்பில் மேற்குப் பாகிஸ்தான்

8