பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவில் படைகளுடன் பாரத நாட்டின் பிரதேசக் கெளரவத்தைச் சிறிதும் மதிக்காமல் படையெடுத்து வந்ததுடன் நிற்காமல், இந்தியா தான் படையெடுத்து வந்து தன் துருப்புக்கள் மீது கடும் தாக்குதல்கள் செய்ததாகப் புகார் செய்து, பீகிங்கிலிருந்த இந்திய ஸ்தானிகரிடம் மிகக் கடுமையான ஆட்சேபக் கடிதம் ஒன்றைக் கொடுத்தது. அதே நாளில் அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா கோரினல், உதவி செய்வது பற்றி ஆலோசிக்கத் தயாராயிருப்பதாகத் தகவல் வந்தது. இடையில் போர்முனைப் பிரதேசங்களில், இரவும் பகலும் போர் நடந்து கொண்டிருந்தது. இரவு நேரத்தில் 4, 5 அங்குலம் பனிக்கட்டி மழையாகப் பொழிந்துகொண்டிருந்தது.

இரண்டாம் தாக்குதல்

சீனர்கள் காமெங் டிவிஷனில் தக்லா மலையருகிலும் தெற்கிலும் நடத்தி வந்த தாக்குதலுடன், அடுத்த சுபன்ஸிரி டிவிஷனின் வடகோடியிலுள்ள லாங்ஜூவையும், நேபாவின் கீழோரமான லோஹித் டிவிஷனில் கிபுடூவையும் நோக்கி 22-ந்தேதி இரு பெரும்தாக்குதல்களையும் மேற்கொண்டனர். இந்தியா, பர்மா, திபேத்து ஆகிய மூன்றுக்கும் உரிய எல்லையருகிலுள்ளது கிபுடூ.

லடாக்கில் பாங்காங் ஏரிப் பகுதியிலும், பிற இடங்களிலும் எதிரிகள் மலைப் பீரங்கிகளுடன் டாங்குகளையும் உபயோகித்துப் போராடினர். சில நிலையங்களில் இந்தியப் படையினர் நான்கு ஐந்து மடங்கு அதிகமான சீனரை எதிர்த்துச் சலியாது காத்து வந்தனர். ஆயினும் அனல் கக்கி வந்த டாங்குகளின் முன்பு அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

89