பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


கடுமையான உழைப்பு ஒருபுறமிருக்க, உயர்ந்த பண்புகளைக் கொண்டொழுகிய சான்றோர் என்றும் கூறலாம். அவரது வாழ்வு, எளிமையிலும், வளமை கண்ட வாழ்வு! குறைந்த வருவாயைக் கொண்டு நிறைந்த உள்ளத்தோடு, நேர்மை தவறாமல், சங்ககாலப் புலவரைப் போல், நிமிர்ந்து வாழும் நெறியாளராகத் திகழ்ந்தவர். உடுத்தும் உடையோ மிக மிக எளியது; எட்டு முழ வேட்டி ‘ஜிப்பா’ எனும் நீண்ட கைச் சட்டை; பையில் ஒரு பொடிடப்பா; முகத்தில் கண்ணாடி; சிறிதே வளர்ந்து காணப்படும் தலைமுடி. எளிய உடை என்றாலும் எடுப்பான தோற்றம்! கவலை சிறிதுமின்றி எப்போதும் கலகலப்பாகச் சிரித்து உரையாடும் சிறந்த பண்பு! வாழ்வு எளிமையே எனினும், புலமைத்திறமோ மிகமிக வலியது! அதனால், எந் நிலையிலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, கருத்துக்களை மாற்றிக் கொள்ளவோ ஒரு போதும் இசையமாட்டார்!

இவ்வாறு, உரைவேந்தர், கடல் போன்ற கல்வியாளரானாலும் தருக்கோ, தற்பெருமையோ, தலைகாட்டக் கண்டாரிலர். தன்னடக்கத்திலும், நன்னடக்கையிலும், ‘ஆன்றவிந்தடங்கிய சான்றோர்’ வரிசையில் வைத்து மதிக்கத் தக்க மாண்பினர். ‘அச்சம்’ என்பது இவர் அறியாத ஒன்று. ‘அவையஞ்சாமை’ இவருக்குக் கருவிலே வாய்த்த ‘திரு’!

உரைவேந்தரின் உயர்வுக்கும் புகழுக்கும் அவர்பால் அமைந்திருந்த நற்பண்புகளும் காரணம் எனலாம்.

                 “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                  செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

(குறள்-110)

எனச் செய்ந்நன்றியின் சிறப்பை ஆணித்தரமாக எடுத்துரைப்பார் வள்ளுவர். இத்தகைய ‘செய்ந்நன்றியறிதல்’ உரைவேந்தரிடம் காணப்பட்டமைக்குப் பல நிகழ்ச்சிகள் கூறலாம்.

தொடக்க காலத்தில் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் அதன் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரும் உரைவேந்தர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.


“கரந்தைத் தமிழ்ச்சங்கம் என் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, வளமான புலமைக்கும் நலமான வாழ்வுக்கும் வழிகோலியது. கரந்தையில்