பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

113


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், உரைவேந்தர், பணி புரிதற்காக முயற்சி செய்தவர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்! இதனை அறிந்த உரைவேந்தர், கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளைக்கு எழுதிய மடல் ஒன்றில், ‘அருளண்ணல் நம் அருமைப் பண்டிதமணியர்வர்களே...!’ என்று போற்றுதலைக் காணலாம்.

தம்மைவிட அனுபவத்திலும், புலமைத் திறத்திலும் சிறியவராயிருந்தாலுங்கூடத் தமிழ்த்தொண்டு புரிபவராயின், அவரைப் பெரிதும் பாராட்டி ஊக்குவிக்கும் உயர் பண்பும் உரைவேந்தர்பால் உண்டு:

ச.சாம்பசிவனார். பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்துபோது, ‘தமிழிலக்கியத்தில் நெய்தல் திணை’ என்றதோர் ஆராய்ச்சி நூலினை எழுதினார். அது 1964ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய உரைவேந்தர், பாராட்டும் பண்பை இயற்கையாகவே கொண்டிருந்த காரணத்தால் நூலின் சிறப்பை ஆறு பக்க அளவில் விளக்கி, இறுதியாக,


“நெய்தலிற் காணப்படும் உயிரினங்களையும், பிறவற்றையும் தனித்தனியாகக் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமான செயலாகும். சிறந்த தமிழாசிரியராதலால், மாணவர்களும் பிறரும் பொருளியல்பை நன்கு உணரத்தக்க வகையில் எடுத்துரைக் கின்றார்....இயற்கை உயிர்களின் இயல்பு கூறற்கண்ணும், உரிப் பொருளின் உயர்ந்த கருத்துக்களை விளக்குதற்கண்ணும் நண்பர் திரு. சாம்பசிவம், எளிய முறையில் யாவரும் நயந்து மகிழுமாறு இனிமை கமழ எழுதுவது அவரது புலமை நயத்தை நன்கு வெளிப்படுத்து கிறது. இதனைக் காணும் என் உள்ளம் இவர் ஏனைத் திணைகட்கும் இவ்வாறு எழுதவேண்டுமென விரும்புகிறது!”

என்று கூறுவது, இவரின் உயரிய பண்பைக் காட்டுவதாம்!

தமிழ்ப் பேராசிரியர்கட்கும், தமிழ்த் தொண்டு செய்பவர்கட்கும் பேருதவி புரிவதிலும் தலைசிறந்தவராக விளங்கியவர் உரைவேந்தர்.