பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


உரைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது, பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். திடீரென்று அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது; எனவே 1-7-1944 இல், அவர் பணியினின்று விலக வேண்டியதாயிற்று. அவரது உடல்நிலைக்குப் பெரிதும் இரங்கிய உரைவேந்தர், கழக ஆட்சியாளர் வ.சுப்பையாபிள்ளைக்கு ஒரு மடல் வரைந்தார். அதில்,


‘அவர்கட்கு(கா.சு. பிள்ளை)ச் சிறிதுநேரம் பேசவோ, எழுதவோ,நடக்கவோ முடியாது. கைநடுக்கம் மிகுதியாய் விட்டது. அவரைக் காணுந்தோறும் கவலை பெரிதாகிறது. அவர்கள் தாம் இப்போதிருக்கும் நிலையில் எங்கே போவது? எவ்வாறு வாழ்வது? என்ற கவலையில் செய்வ தறியாது திகைத்த வண்ணம் இருக்கின்றார். சிதம்பரத்தை விட்டுப் போவதற்கே உடல் இடந் தருமோ என்ற கவலையும் அச்சமும் அடைகின்றார்!”

என்று இன்னும் பல செய்திகளை மிக்க வருத்தத்துடன் எழுதியிருந்தார். கழக ஏற்பாட்டின்படி, கா.சு.பிள்ளையை அழைத்துக் கொண்டு, உரைவேந்தர் நெல்லையிற் சேர்ப்பித்தா ரெனில் உரை வேந்தரின் காலத்தினாற் செய்த உதவிக்கு ஈடு சொல்ல இயலாது!

தமிழவேள் பி.டி. இராசனார், ‘அறநெறியண்ணல்’ கி. பழநியப்பனார் ஆகியோரின் நட்புக்குரியவராக விளங்கியவர் உரைவேந்தர். அவர்கள் இருவரும், கோலாலம்பூரில் நடந்த, ‘முதல் உலகத் தமிழ் மாநாட்’டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பேராளராகக் கலந்து கொண்டனர். மாநாட்டில், தமிழவேள், கட்டுரை ஒன்று வழங்க முடிவு செய்திருந்தார். ‘தமிழ்நாட்டில் பெண்கள் நிலை’ (Status of Women in Tamilnadu) என்பது, ஆய்வுத் தலைப்பு. இதைச்சிறந்த முறையில் தயாரிக்க எண்ணிய தமிழவேள், பி.டி.இராசனார், உரைவேந்தரையும், சாம்பசிவனாரையும் தமது மாளிகைக்கு வரவழைத்துத் தமது கருதுக்களைக் கூறி, இதற்கு முழு வடிவம் தரவேண்டுமென்றார். அவ்வாறே பல நாட்கள் முயன்றதன் பயனாகக் கட்டுரை உருப்பெற்றது. மாநாட்டின்போது பலராலும் பாராட்டப்பெற்றது!