பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை

இவ்வாறு உரைவேந்தரின் ஆசிரியப் பண்புகளை மனங்குளிர எடுத்துரைப்பவர், அவர்பால் தனியே தனித்தமிழ் கற்று, 'வித்துவான்' ஆகித் தமிழாசிரியப் பணிபுரிந்த 'கோமான்' ம.வி. இராகவன் ஆவார்.

மாவட்டக் கழகப் பள்ளிகளில்...!

கரந்தையை விட்டு வெளியேறிய உரைவேந்தர், 1929 முதல் 1941 வரை, வட ஆர்க்காடு மாவட்டக் கழக (District Board) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் 'தமிழ்ப் பொழிலில் இவர் எழுதிய கட்டுரைகள் மூலம், இவர் காவிரிப்பாக்கம் - காரை, செய்யாறு, போளுர், திருவத்திபுரம், திருவோத்தூர், செங்கம் முதலான பல்வேறு ஊர்களில் தமிழாசிரியராக, தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தமை அறிய முடிகின்றது. அக்கால ஆட்சியாளர்களால், உரைவேந்தர், அடிக்கடி பல்வேறு ஊர்களில் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

உரைவேந்தரின் பெருந்தமிழ்ப் புலமைக்கு உரிய இடம், உயர்நிலைப் பள்ளியாகாது; எனினும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான் என்பதை நன்குணர்ந்தவராதலின், பள்ளிப் பணியிலிருந்து கொண்டே தமது தமிழ்ப் புலமையை மேலும் வளர்த்துக்கொண்டார். பணியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே இவரின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலாயிற்று. பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், நகரத்துப் பெரியவர்களும் இவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலாயினர். பள்ளிப் பணிநேரம் தவிர எஞ்சிய நேரத்தில், நூல் ஆய்வு செய்தல், இதழ்களுக்கு அரிய கட்டுரைகளை அனுப்புதல், இலக்கிய மன்றங்களுக்கும் சமய நிகழ்ச்சிகளுக்கும் சென்று உரையாற்றுதல், இடையிடையே ஏடுகள் படித்தல் எனப் பல்வேறு ஆக்கப் பணிகளை இடையறாது செய்து வந்ததால், அப்போதே நல்ல பேரும் புகழும் கிடைக்கலாயின.

உரைவேந்தர், சேயாறு கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தபோதுதான், புலவர் கா. கோவிந்தன், ம.வி. இராகவன் ஆகியோர், இவர்பால் தனித்தமிழ் கற்க மாணவர்களாகச் சேர்ந்து, முறையே பயின்று, பிற்காலத்தில் சிறப்புப் பெற்றவர்கள்.

ம.வி. இராகவன் என்பார், தாம் எவ்வாறு உரைவேந்தர்பால் அணுகித் தமிழைக் கற்றார் என்பதை ஒரு கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கின்றார்: