பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

'திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை' நூல் ஏறத்தாழ 1935ஆம் ஆண்டில் வெளிவந்ததாகக் கொள்ளலாம். இஃது உரைவேந்தர் மறைந்தபின், அவர்தம் 23 ஆம் ஆண்டு நினைவு வெளியீடாக 1985இல் ஒளவை து.நடராசனாரால் வெளியிடப் பெற்றது.

திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய 'பூத் தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி' எனத் தொடங்கும் திருவோத்தூர்த் தேவராப் பதிகத்திற்கு அற்புதமான உரை தந்துள்ளார் உரைவேந்தர்.

தொடக்கத்தில், ஓத்தூர் என்ற ஊரின் விளக்கத்தையும் பின்னர்த் தேவாரம்' என்பதற்குரிய பல்வேறு பொருள் நயங்களையும் விளக்குகின்றார். "ஓத்தூர் என்பது ஓத்து+ஊர் எனப் பிரியும். ஓத்து, ஓதப்படுவது, பாடப்படுவது பாட்டு என்றாற் போல. சேயோனாகிய முருகனுக்கு மலை நிலமும், பெருமான் என்ற பிரமனுக்குத் தாமரைப் பூவும் இடமானதுபோல, திருவோத்தூர், பரமனுக்கு உரிய இடமென்பதாம்!" என்று கூறிவிட்டு,

"சுவாமிகள்(சம்பந்தர்) தேவாரத்திற்குச், சுமார் ஐந்நூறு வருடங்களுக்குப் பின் தோன்றிய நன்னூல் இலக்கணமாகா தாகையால், தொல்காப்பியமே ஈண்டுக் கொள்ளப்படுவதாயிற்று”

என்று கூறுவது, இவருக்குரிய நுட்பான இலக்கணப் புலமைக்குச் சான்றாகும்.

இனித் 'தேவாரம்' என்பதற்குரிய பல்வேறு பொருள் நயங்களைக் கூற வந்தவர், சைவத்திரு யாழ்ப்பாணத்து வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதர், விரித்தெழுதியவற்றைச் சுட்டிக் காட்டி, அதனை அப்படியே தந்துரைக்கின்றார் உரைவேந்தர்.

'தேவாரம்' என்பதற்குப் பல்வேறு பொருள் நயங்களில் ஒன்றை மட்டும் இவண் சுட்டலாம்:

"பேரழகு, பேராண்மை, பெருங்கல்வி, பேரறம் முதலியவற்றை உடைய ஆண்மகனது இலக்கண முதலிய வற்றை ஓதல், கேட்டல்களைச் செய்த துணையானே, மகளிர்க்கு அவன்மாட்டுக் கழிபெருங் காமம் மீதுர்வதுபோல் சிவபிரானது