பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

87


போற்றிப் பரவ வீற்றிருந்த அதன்புகழ் மறைந்தது! அறவர் அறவராய், மறவர் மறவராய் மாண்பு பெற்ற தமிழர், மாற்றவர்க்குப் பணிந்து, அவருடைய அடிவருடும் அடியராகும் அடிமைநிலை எய்தினர். தமிழ் இயலும் இசையும் கூத்தும் தமக்குரிய இடமிழந்து இறந்தொழிந்தன. அரசியல் - வாணிகம் - தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுகள் மறைந்து போயின!”

என்று தமிழரின் வீழ்ச்சிகுறித்து, உரைவேந்தர் மனம் நொந்து எழுதுகின்றார். (வரலாற்றுக் காட்சிகள்)

தமிழின் தாழ்நிலைகுறித்து உரைவேந்தர், 1956இல், ஆற்றிய பேருரையிலிருந்து ஒரு சிறு பகுதி அறியத்தகும்:

“தமிழ் மக்களின் தமிழகம் இடம் சுருங்கி, பண்பாடு மெலிந்து, அடிமையுணர்வு மிகுந்து, வறுமையில் நெளிந்து கொண்டிருக்கும் நிலையில் நிறுத்தப் பெற்றுளது. காணும் இடமெல்லாம் தமிழர் அறியாத மொழிகள் காட்சி தருகின்றன. காணப்படும் ஒருசில தமிழ்ச் சொற்களும் பெயர்களும் பிழையும் வழுவும் பெருகியுள்ளன. அரசியல் நிலையங்களிலும், தொழில் வாணிக அலுவலகங்களிலும் புகைவண்டி முதலிய போக்கு வரவுகளிலும், சமய நிலையங் களான கோயில் வழிபாடுகளிலும் பிறதுறைகளிலும் தமிழர்களின் தமிழ் இல்லை! தமிழர் உள்ளம் வளர்க்கும் தமிழ்க் கருத்தும் ஒழுக்க நெறியும் தக்கவாறில்லை! தமிழர் அனைவரும் பிறர் யாருக்கோ அடிமைப்பட்டு, உரிமையிழந்து, மான மில்லாத வற்றல்மரங்கள் போல, வாடிய உள்ளமும் கோடிய நினைவும் கொண்டு, குனிந்து தோன்று கின்றனர். தமிழரது தமிழ்வாழ்வு, தமிழகத்தில்தான் இது நிலை என்றால், அவருடைய கிளைஞர் வாழும் பிறநாடுகளிலும்இந்தஅவலநிலையேநிலவுகின்றது!”

தமிழ் மொழியின் அவலநிலை குறித்து உரைவேந்தர் மனம் வெதும்பி உரைப்பன இன்னும் பலவுள!