பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

89


                 “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
                  வேட்ப மொழிவதாம் சொல்”

(குறள்:643)

என்பார் திருவள்ளுவர். “நட்பாய் ஏற்றுக் கொண்டவரைப் பிணிக்கத்தக்க குற்றமின்மை, சுருங்குதல் முதலான குணங்களுடன் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும், பின் அப்பகைமை நீங்கி நட்பை விரும்புமாறு சொல்லப்படுவதே சொல்லாம்” என்பது இதன் பொருள். பேசுவது என்பது ஓர் அருங்கலை; பெறுதற்கரிய கலை. இஃது உரைவேந்தருக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர், விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு, தமது பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர், விவேகானந்தரின் சொற் பொழிவுகளைப் பன்முறை படிக்க வேண்டும்’ எனத் தம் மாணவர்கட்கு அறிவுறுத்துவார் உரைவேந்தர்.

கவர்ச்சியான தோற்றம், பேரவைகளுக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான- தெளிவான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழூத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் எனப் பேச்சாளர்க்குரிய தன்மைகள் அனைத்துமே உரைவேந்தரிடம் இயல்பாகவே அமைந்துவிட்டன. பேச்சுக்குரிய பொருள், இலக்கியம், இலக்கணம், சமயம் ஆகியவற்றுள் எதுவாயினும் அதுபற்றிய செய்திகளையும், கருத்துக்களையும் வரையறுத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாமல், காரண காரியத் தொடர்பு அமைய நிரல்படத் தொடுத்துப் பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, கேட்போர் ‘அருமை, அருமை’ எனப் பெருமையாகப் போற்றுமாறு உரையாற்றும் திறன் கொண்டவர் உரைவேந்தர். இவரின் ‘நாவன்மை’ குறித்து, இவரின் மாணவர் ம.வி. இராகவன் கூறுவது இவண் குறிக்கத்தகும்:

“சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய (உரைவேந்தர்) சிந்தனைத் தெளிவையும், சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற் பொழிவுகளில் நுண்மாண் நுழை புலத்தையும் ஆய்வுத் திறனையும் அறியலாம். இலக்கியச் சொற் பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்புநலத்தையும் உணர்ந்து