பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


இச் ‘சிவபுராணச்’ சொற்பொழிவின்போது, மக்கள் ஆர்வமாய்க் கேட்கவேண்டும் என்னும் கருத்தால், தொடக்கத்தில், திருக்குறள் காமத்துப்பாலில் வரும் ஒரு பாடலைக் குறிப்பிடுகின்றார்:

                “ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
                 நீடுவாழ் கென்பாக் கறிந்து”

(குறள்:1312)

என்பது உரைவேந்தர் எடுத்துக் கூறிய திருக்குறள். ‘இதற்கும் சிவபுராணத்திற்கும் என்ன தொடர்பு?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.

திருவாசகச் சிவபுராணப் பகுதியை, ‘பாயிரம், வாழ்த்து, வெற்றி, வணக்கம், நூற்பொருள், அவையடக்கம்’ என்னும் கூறுகளாகப் பகுத்துக்கொண்டவர். ‘வாழ்த்து’ என்ற பகுதியை விளக்க வருங்கால் மேற்காட்டிய திருக்குறளைக் கையாள்கின்றார்.

“வாழ்த்தினை முதற்கண் கூறியது அவர்க்கு(மணி வாசகர்)ச் சிவபரம்பொருள்பாலுள்ள பேரன்பினை எடுத்துக் காட்டுகின்றது; “உண்மையன்புடையார், தம்மால் அன்பு,தாம் புகழ்தற்கும் வணங்குதற்கும் உரியராகியவழி, அவற்றைச் செய்யாது வாழ்த்துதற்கே முதற்கண் விரும்புவர். உழுவலன்பால் பிணிக்கப்பட்ட ஒருவனும் ஒருத்தியும் கூடியிருந்தவழி, அவன் அவளால் வணங்கவும் புகழவும் படுதற்குரிய னாகவும், வாழ்த்தப்படுவதையே அன்பின் முதிர் நிலையாகவும், இன்ப ஊற்றாகவும் சான்றோர் கருதுவர். அஃது உயிர்கட்கு இயல்புமாகும். இதனை, இன்பநுகரும் சிறப்பால் ஊடியிருந்த காதலர்மாட்டு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்கப் போந்த வள்ளுவப் பெருந்தகையார், காதலியாகிய அவள், தன் காதலனாகிய கொழுநனை வாழ்த்தும் செயலையே விதந்து, அவள் கூற்றில் வைத்து,

“ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து”

எனக் கூறுதல் காண்க!”