பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


வற்புறுத்துகிறது’ என்ற கருத்துப்படவும்’ கூறி முடிக்கின்றார்... முடிவில் ‘அற்புதப் பிரபஞ்சம்’ (The Mysterious Universe) என்ற நூலை எழுதி முடித்தார் சர்சேம்சுசீன்சு!”

இவ்வாறு, தாம் பெற்ற ஆங்கிலப் புலமையைச் சமயமறிந்து சைவசமயத்தோடு ஒப்பிட்டுப் பேசும் பேராற்றல் பெற்றவராகவும் விளங்கினார் உரைவேந்தர்!

‘சைவ சித்தாந்தக் கருத்துக்களின் பிழிவு இச் சொற்பொழிவு’ எனக் கூறலாம்.

உரைவேந்தர், ‘ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்’ என்ற நூலினை எழுதுவதற்குமுன், சைவசித்தாந்த சமாச அமைச்சராக இருந்த மா. பாலசுப்பிரமணிய முதலியாரின் விருப்பப்படி, குன்றக்குடியில், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் ‘ஞானாமிர்தம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். உரைவேந்தரின் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்த ‘சித்தாந்த சரபம்’ பழனி ஈசான சிவாசாரியார், ‘இரும்புக் கடலைப் பக்குவமாக வேகவைத்து விட்டீர்கள்!’ என்று உரைவேந்தரைப் பாராட்டினார். பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரும் சிவக்கவிமணியும் ஞானாமிர்த நூலை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு கூறினர் என்ற செய்திகள் முன்னரும் சுட்டப்பட்டன.

தருமையாதீனத் திருமடத்தில், 1941ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 28 முதல் 31 வரை, ‘மெய்கண்டார் சித்தாந்த மாநாடு’ ஒன்று நடந்தது. அப்போது, 30.8.41இல், கோ.ம. இராமச்சந்திரன் செட்டியார் தலைமையில், ‘சிவஞானபோதம்’ குறித்து விரிவுரையாற்றினார் உரைவேந்தர்.

சென்னையில், 22.4.1944இல், ‘சொல்லின் செல்வர்’ ரா.பி. சேதுப்பிள்ளை தலைமையில் நடந்த, ‘புறநானூற்று மாநாட்’டில், ‘புறநானூறு காட்டும் தமிழ் நாகரிகம்’ என்ற பொருள் பற்றியும், 9.2.1952இல், நெல்லை மாநகரில் மு. வரதராசனார் தலைமையில் நடந்த ‘பத்துப்பாட்டு மாநாட்’டில், ‘திருமுருகாற்றுப்படை’ என்ற பொருள்பற்றியும்; அவ்வாறே அதே நகரில் 12.2.1956இல், நடந்த ‘பதினெண்கீழ்க்கணக்கு மாநாட்’டிற்குத் தலைமை தாங்கியும் ஆற்றிய சொற்பொழிவுகளனைத்தும், ‘நற்றமிழ் நாவலர்’ எனும் பட்டியலில் இடம் பெறத்தக்கன.