பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

95


நெல்லை தருமபுர மடத்தில் 1952 மே திங்களில் 21 நாள் தொடர்ந்து ‘சிவஞான போத பாட வகுப்பு’ நடைபெற்றது. பாடம் நடத்தியவர் சாத்தூர் வழக்கறிஞரும் தமிழ்ப் புலவருமான தூ.சு. கந்தசாமி முதலியார்! வகுப்பில் நாற்பது பேர் பாடிம் கேட்டனர். அப்போது சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியவர் உரைவேந்தர்.

சென்னை மாநகரில், 25.12.1964இல், உரைவேந்தர் தலைமையில் ‘காப்பிய நிறைவு விழா’ மிகச் சிறப்பாக நடந்தது. அதில் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய ‘நீலகேசி உரை’ நூல் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் உரைவேந்தரின் தலை மாணவியாகக் கருதப்படும் ‘கலையன்னை’ திருமதி இராதா தியாகராசன், ‘சிலப்பதிகாரம்’ பற்றிய ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இவ்விழாவை நடத்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை கூறுவது இவண் குறிக்கத்தகும்:

“தலைவரவர்களின் (உரைவேந்தர்) மதிப்புமிக்க மாணவி தமிழ்த் திருவாட்டி இராதா தியாகராசன் அம்மையார், ‘சிலப்பதிகாரம்’ பற்றி ஆற்றிய சொற்பொழிவினைக் கேட்டவர்கள், விழித்தகண் விழித்தபடியும், மடுத்தசெவிமடுத்த படியும் தம்மை மறந்து சுவைத்தனர் என்றால், அது மிகையாகாது! ஆசிரியர் (உரைவேந்தர்) தலைமையில் அவர்தம் அருமை மாணவியார் இனிய பேச்சைக் கேட்க வேண்டுமென்று நீண்ட நாள்களாக எண்ணிய எனது எண்ணம் அன்று நிறைவெய்தி, எனக்கு எல்லையில்லா இன்பம் நல்கியது. இங்கே தமிழறியாத திருவாட்டியார், தம் ஆசிரியரிடம் தமிழ்< பயின்ற முறையினை எடுத்து விளக்குவது இனிமை தருவதாகும்.முதற்கண் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளச் செய்து, பின் திருக்குறள் பரிமேலழகர் உரைநூலைக் கையிலே கொடுத்துப் படித்துப் பொருளுணரு மாறும் அதன் வழியே பிற இலக்கியங்களைக் கற்குமாறும் தம் ஆசிரியர் செய்ததைக் கலைமகளும் திருமகளும் ஓருருக் கொண்டாற்போல் விளங்கும் அம்மையாரவர்கள் இயம்பக் கேட்டு வியந்தேன்!”