பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

இந்திய சமுதாய... /நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்


“இகத்திலொரு கணவன், பரத்துக்கொரு நாயகனோ?
உலகியலுக்கொப்ப ஒருகணவன், ஆன்மீக நாயகன் மற்றொருவனோ?
என்கணவன் சென்னமல்லிகார்சுன தேவனே!”

என்று உறுதி கொண்டு புறப்பட்டுவிட்டாள். பெற்றோரிடம் ஆசி பெற்றே இந்தப் பருவம் ததும்பும் இளம் பெண், தன் ஆடைகளையும் துறந்து நிர்வாணமாகப் பயணம் புறப்பட்டாளாம்.

இவருடைய வரலாற்றில், காரைக்காலம்மை, தம் இளமையைச் சிவனிடம் வேண்டி மாற்றிக் கொண்டு பேயுருவில் புறப்பட்டதுபோல் அற்புதம் நிகழவில்லை. சாத்தியமல்லாத அசாத்தியமே, சாத்தியமாக்கப்படும் திட உணர்வையும் நம்பிக்கையையும் தேவியின் அனுபவ உணர்வுகள் பிரதிபலிக்கும் கவி வாசகங்களில் காண்கிறோம்.

காடு மலைகள் கடந்து, கொடிய விலங்குகள், மூடர் மூர்க்கர், கள்வர் என்ற எதிராளிகளைச் சமாளித்து, பசி சோர்வு, உறக்கம், களைப்பு என்ற உடல் உபாதைகளை வென்று, ஸ்ரீசைலத் தலத்தில் குடிகொண்ட சென்ன மல்லிகார்ச்சுன தேவனின் தரிசனமே இறுதி இலட்சியம் என்று பயணம் செய்கிறார் தேவி.

தனது கரிய அடர்ந்த கூந்தலால், மேனி முழுதும் மூடவிரித்து, இவர் நடந்தாராம்.

இவரைத் துன்புறுத்த வந்தவருக்கு இவர் அறிவுறுத்திய வாசகம் இது:

“அவிழ்ந்த கூந்தல்; வாடிக்கருகிய முகம்.
மெலிந்து வற்றிய உடல்,
மெய் சோர்ந்து, உலக வாழ்வு ஒதுக்கி,
குலம்கெட்டு, சென்னமல்லிகார்ச்சுன தேவனைக்கூடப்