பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

இந்திய சமுதாய... /நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்


கல்யாணம் என்ற தலத்தில், சமயக்குரவர்கள் தங்கி மேன்மைமிகு உரைகளையும் உலகுக்களித்த மடத்தில், அக்கமாதேவியும் வருகிறாள். பஸவண்ணர், அல்லமப்ரபு ஆகிய சிவபக்த ஞானியரைக் கண்டு உரையாடும் அநுபவங்களைப் பெறுகிறாள். பல்வேறு கொள்கைக்காரரிடம் பேசியும், இவளுடைய அறிவும், ஞான சாதனையும் ஏற்றம் காணும் மேன்மைகளைப் பெறுகிறாள்.

“கல்யாணம்; கயிலாயம்...
உள்ளும் கல்யாணம் வெளியும் கல்யாணம்...”

என்று பரவசப்படுகிறாள்.

கல்யாணத்திலிருந்து, ஸ்ரீ சைலம் செல்லும் பயணம் ஓர் அற்புத சாதனை என்றே கூறலாம்.

அன்பு முற்றிய உச்ச நிலையில், தாபத்தீ எரிக்கும் வேதனையில், கூடலை எண்ணி ஆறுதல் கொள்ளும் எல்லைக் கோட்டில், அவர் வாசகங்கள் அற்புதமான அநுபூதி அநுபவங்களை விரிக்கின்றன. ஆண்டாளைப் போன்று உடல்பரமான போக உணர்வுகளாய் மட்டுமே வெளிப்படவில்லை; காரைக்காலம்மை போன்று, “கொங்கை திரங்கி, நரம்பெழுந்து குண்டு கண் வெண்பற்குழி வயிற்றுப் பிதுங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள் கணைக்காலோர் பெண்பேய் தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கக் குளிர்ந்தலை ஆடும் எங்கள் அப்பன் இடந் திருவாலங்காடே” என்று அச்சம், அவலம், இருசுவைகளும் முதன்மைப்படுத்தப்படும் உலகியல் மாயக் கொள்கை யாகவும் பிரதிபலிக்கவில்லை.

வாழ்வியல், ஆன்மிக இலட்சியம் இரண்டு முனைகளையும் தம் அநுபவ சாதனைகளாகப் பெண் என்ற உணர்வுகளோடு, இணைக்கும் அநுபூதி அநுபவங்களாகவே அவை வெளிப்படுகின்றன.