பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

115


அது முன்னேற்றமில்லை. பெருந்தோல்வியே ஆகும்’ என்று கருத்துரைக்கிறார்.

ஆக பெண்ணுக்கு, கற்பு, சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளே கல்வியின் ஆதாரங்களாகின்றன. கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான நிலையில் வைக்கப்பட்ட தருமம்தான். ஆனால், அந்த நிலை நடைமுறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. மாறாக, இராமனின் வனவாசத் தனிமையில் அவன் தூய்மை குறித்த கேள்வியே எழவில்லை. தன் மனைவி, ஏற்கெனவே கற்பின் தூய்மையை அக்கினியில் புகுந்து நிரூபித்தவள் என்ற உண்மைகளுக்கப்பால், தான் நாடாளும் மன்னன் என்ற ஏகாதிபத்திய நெறியை முதன்மையாக்கி, அவளைக் கானகத்தில் விடச் செய்கிறான்.

இந்த மரபைப் பின்பற்றித்தான் ஆண் ஆதிக்கம் இன்றும் தன் வலிமையை மெய்ப்பித்து வந்து கொண்டிருக்கிறது. பெண்கல்வி என்பது அவளை இன்னமும் செல்லாக் காசாக, அதே தொண்டடிமை நிலையில்தான் வைத்திருக்கிறது, எனவே, விடுதலைக்கு முன் பேசப்பட்ட பெண் கல்வி, தேசியம் என்ற வகையில் பெண்ணுக்குச் சம உரிமை என்று காட்டப்படுவதற்காகத் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டதுதான்.

சகோதரி நிவேதிதா, பெண்கல்விக்குத் தொண்டாற்றினார் என்பதைவிட அக்காலத்து வங்க இளைஞர்கள் அனைவருக்கும் தேசிய எழுச்சியைத் தோற்றுவித்தார்; அதில் பெண்ணுரிமை உட்பட்டது என்பதே சரியாகும். இவர், பிரும்மசாரிணியாகத் திகழ்ந்தார். வெள்ளை இனத்தவராக இருந்ததால், மக்கள் இவரை ஏற்றுக் கொண்டனர் என்பது வெளிப்படை. இவர், தீவிரப் புரட்சிக்கான வித்துக்களை இளைஞரிடையே பரப்பினார். ‘தேசியக் கொடி’ என்ற ஒன்றுக்கு முதன் முறையாகத் திட்டமிட்டார். வெடிகுண்டு ஆயுதப்பயிற்சி போன்ற எழுச்சிகளுக்கும் கூட