பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

127


இதே கஸ்தூரிபாய், தங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளில் கண்டசரம் (வைரக் கற்களிழைத்தது) வேண்டும் என்று விரும்பி எடுத்து வைத்தபோது காந்தியடிகள் ஒப்பவில்லை.

பேதை, தமக்கு இல்லாது போனாலும், தம் மருமகள்களுக்கேனும் உதவுமே என்று ஆசைப்பட்டார். ஆனால் கந்தியடிகளோ, அதை உடனே திருப்பிவிட ஆணையிட்டு விடுகிறார்.

சுதந்திரம், மேன்மை என்பதெல்லாம், அவருடைய கருத்துக்கிசைய அவள் ஆசைகளை வெட்டித் திருத்திக் கொள்ளல் என்ற பழைய செப்புகளிலேயே வடிவம் பெற்றிருக்கின்றன.

‘இந்தியப் பெண்மை என்ற ஒரு முழுவடிவத்துக்கு, கஸ்துரிபா எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறார். தம்முடைய தனித்துவம் என்ற சிந்தனையை கணவனின் ஆணையுடன் ஐக்கியப்படுத்தி, அவர் போற்றிய கற்பின் வடிவமாகத் திகழ்ந்த அன்னை, சிறையில் கணவர் மடியில் உயிர் நீத்தார். இந்தப் பத்தினி வடிவம், இந்தியப் பெண்மைக்கு முரண்பாடான கணவனை இழந்த கோலத்துக்கு உட்படாதது, மிகமிகப் போற்றுதற்குரியதாகி விட்டது. கற்புடை மகளிர் கணவர் கண்கலங்க, முன்னதாக மங்கலப் பொருட்களுடன் இறுதியை எய்தினர் என்ற இந்திய நம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழ்கிறார், கஸ்தூரிபாய்.