பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை


ஆனால், அவை உயர்ந்தவை என்று அவர் பிஞ்சு மனதில் பதிந்து விடாதபடி, தீவளர்த்து, அதில் உயர்ந்த மல்மல்களும், ஜார்ஜட்ரக ஆடைகளும், மற்றும் விதேசச் சாதனங்களும் ஆஹுதி செய்யப்பட்டதையும் அவள் கண்களால் கண்டாளே!

தேசிய வரலாறு படிப்பதற்குப் பதிலாக, வரலாறு படைக்கப்பட்ட காலத்தில் வளரும் வாய்ப்பினைப் பெற்றாள் இந்திரா.

இந்தத் தேசியத்தில், சிறை வாழ்வு, பிரிவுத்துயரம், நெருக்கடிகள், போலீஸ் கெடுபிடி, சோதனைகள், விரும்பிக் கஷ்டங்களை ஏற்கும் அருமைகள் எல்லாமே விளையாட்டுப் போல் ஆர்வமும் நிறைவும் தரும்படி அவளுக்குப் பழகிப் போயின.

கல்விப் பயிற்சி இடமாற்றம் பெற்று, அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று சீரில்லாமல் தொய்ந்தாலும், பார்க்கப் பிரியம் மிகுதியாகும் அன்பு வடிவைப் பாராமல் சிறையில் வாடும் தாபத்தைத் தீர்த்துக் கொள்ள தந்தை ஜவஹர்லால் உலக வரலாற்றையே கடிதங்களாக வரைந்தார். “செல்வமே, 1916 இல் உலகம் கண்டிராத வகையில் சோவியத் புரட்சியும் புதுயுகமும் வந்தது. 17இல் நீ பிறந்தாய்!” என்று தொடர்புபடுத்தினார். சொச்சமிச்சத்தின் கவின்மிகு குஞ்சங்கள் போல் சாந்திநிகேதனில் குருதேவர் தாகூரின் அன்பிலும் அரவணைப்பிலும் சில மாதங்கள் கல்வி பயிலும் பேறும் கிடைத்தது.

மேல்நாட்டில் நோய்வாய்ப்பட்டு நலிந்த அன்னையின் அருகில் இருக்கையிலேயே வருங்கால மணாளன் நிச்சயமாகிறான்.

அன்னையின் மறைவுக்குப் பின் மேலை நாட்டிலேயே கல்வியைத் தொடர்ந்தாலும், அதை நிறைவேற்றாமலே நாடு திரும்பும்படி சூழ்நிலை கனத்துவிட்டது.