பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

135


நேரு குடும்பம் செல்வச் செழிப்பு மிகுந்தது. வெள்ளைக் கார மேலாளருக்குச் சமமாக, இந்திய ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தெய்வம்போல் கருதும்படி உயர்ந்த குடும்பம்; அக்குடும்பத்தினர் தேசியத்தில் திளைத்து எல்லாச் சுக போகங்களையும் துறந்தனர்…?! நேரு வீட்டுக்கு அன்றாடம் துணிகள் பாரிஸிலிருந்து சலவை செய்து வருமாம்!

அவர்கள் வீட்டுக்கு உணவு வகைகள், துணிமணிகள், பீங்கான் போன்ற புழங்கும் சாதனங்கள், எல்லாம் மேலை நாட்டிலிருந்துதான் வருகின்றனவாம்!

நேரு குடும்பம்… அது அரச குடும்பம் போன்றது…

இத்தகைய ஒரு பிரமிக்கத் தகுந்த கருத்து, அந்நாளில் எல்லா இந்தியக் குடிமக்களிடமும் இருந்தது.

இந்திய சுதந்தர வரலாற்றில், காந்தியடிகள், வல்லபாய் படேல், ராஜன் பாபு, சுபாஷ் சந்திரபோஸ், சக்ரவர்த்தி இராஜகோபாலாசாரி என்று எத்தனை பெரியோர் அந்நாளில் அருந்தியாகிகளாகத் திகழ்ந்திருக்கின்றனர்? என்றாலும், ‘நேரு குடும்பம்’ என்ற சிறப்பு தனியாக மக்கள் மனதில் பதியக் காரணம் என்ன?

கூர்ந்து சிந்தித்தால், இந்திய மக்களின் மனப்பான்மை மன்னர் வழி மரபில் ஊன்றியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். மன்னர் என்றாலே பொது மக்களுக்கு எட்டாத ஆடம்பரம், பளபளப்பு, சொகுசுகளை அநுபவிக்க உரிமை கொள்வது, அந்தக் குலத்தில் தோன்றுவதாலேயே அவை கூடும் மனிதராகப் பிறப்பதில் பெரும்பேறே, மன்னர் குலத்தில்தான் கிடைக்கிறது என்ற கருத்தே நடைமுறையில் நூற்றாண்டுகளாக மக்கள் மனங்களில் ஊறி வந்திருக்கிறது. “ராஜா, ராஜாத்தி..” என்ற செல்லப் பெயர்களே இக்கருத்தை விள்ளுபவை.