பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

139


‘இந்தப் பெண் மணவாழ்வைத் தாங்கி மகப்பேறு பெறுவதற்குக் கூடப் பலமில்லாதவள்; தாயைப் போல் பூஞ்சை’ என்ற கருத்து அன்றைய மூத்த உறவினரிடையே நிலவியது. மருத்துவர்களும் அதை ஆமோதித்து, மகப்பேறு இவளுக்குத் தகாது என்று உறுதியாய்க் கூறினார்கள். நெருங்கிய மருத்துவர் ஒருவர் இதை எழுத்து மூலம் கூட தெரிவித்திருந்தார்.

ஆனால் திருமணத்தின் இலட்சியமே தாய்மைப்பேறு தான் என்ற உறுதி இந்திராவுக்கு இருந்தது. கருவுற்றாள். முதன் முதலில் இந்தச் செய்தியை அறிந்ததுமே, அலஹா பாத் மாளிகையின் குடும்ப மருத்துவர்கள் இந்திராவுக்குப் பிரசவம் பார்க்கும் பொறுப்பை கைகழுவி விட்டார்கள். பெரிய இடம்; தந்தையோ அகமதுநகர் சிறையில் இருந்தார். ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால்? எனவே இந்திரா, பம்பாயில் உள்ள அத்தையின் வீட்டுக்கு அவள் பொறுப்பேற்க வருகிறாள். ஜவாஹரின் இளைய சகோதரி கிருஷ்ணாஹத்தி சிங், இந்திராவுக்கு மிகவும் பாசமும் நெருக்கமும் உடைய அத்தை. கிருஷ்ணா குடும்பத்தில் முதன் முதலாக பார்சி மத இளைஞர் ஹத்தி சிங்கைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இதனால் தானோ என்னமோ, தன்னைப்போல் பார்சி இளைஞனைக் காதலித்துக் கடிமணம் செய்து கொண்ட மருமகளிடம் தனியான அன்பு வைத்திருந்தார் கிருஷ்ணா.

பம்பாயில் மிகப் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவரான டாக்டர் ஷிரோட்கர் இவளுக்குப் பேறு பார்க்கும் பொறுப்பை ஏற்றார். 1944ம் ஆண்டு, ஆகஸ்ட் இருபதாம் தேதி காலை, நோவுகண்டு, இந்திராவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.

அத்தை கிருஷ்ணா, தம் நூலில், இவ்வாறு எழுதுகிறார்:-