பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை


இந்திராவுக்குக் கணவரின் போக்கு சரியல்ல என்று பட்டாலும், அவர் வேற்றுமை பாராட்டினாலும் பெரிது படுத்தாமல் விடுத்தாள். வெளியே கணவன் - மனைவி உறவு பற்றி மட்டுமில்லாமல், ஃபெரோஸின் நடத்தை பற்றியும் பல வதந்திகள் உலவின. இந்திரா பொருட்படுத்தாததனால், இவர்களிடையே உள்ள மண உறவு, சிலும்பல்கள் என்று கூடச்சொல்லிவிட முடியாதபடி அமைதியாகவே இருந்தது எனலாம்.

இந்திரா மேலும் மேலும் அரசியலில் மூழ்குவதை ஃபெரோஸ் ஆதரித்தார் என்றே கூறலாம். என்றாலும் இந்திரா தந்தையின் நிழலில்தான் இயங்கினாள். நேருவை அக்காலத்தில் துதிபாடுகிறவர்களும் பதவி வேட்டைக்காரருமே சூழ்ந்திருந்தனர். அறிந்தோ அறியாமலோ, நேரு அத்தகைய பொய்முகங்களை விலக்கவுமில்லை; ஊக்கவுமில்லை. அவர்களைக் கண்டு கொள்ளாதவர் போல் அநுமதிக்கும் நடப்பு, ஃபெரோஸுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை என்பதை இந்திரா அறிந்திருந்தாள். ஆனால் அவளால் என்ன செய்யமுடியும்?

இந்திரா அடிநிலை - காங்கிரஸ் உறுப்பினர் என்ற இடத்திலிருந்து பெண்கள் அணிப் பொறுப்பு என்று படிப் படியாகத் தீவிரக் கட்சிப் பதவிகளுக்கு ஏறியிருந்தாள். 1959 மே மாதத்தில், தந்தையின் தொகுதியில் உள்ள சில கிராமங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார். அப்போது தான் காங்கிரஸ் செயற்குழு, ஏகமனதாகத் தன்னைக் கட்சித் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் செய்தி வந்தது.

தந்தையின் நிழல் போல் எல்லா அரங்குகளிலும் அவருக்குப் பின்னே அறிமுகமாயிருந்த இந்திரா இவ்வாறு எந்த விதமான முறையான போட்டியும் தேர்தலும் இல்லாமலே காங்கிரஸ் தலைவியாக்கப்பட்டாள்.