பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை



இது குறித்து அந்நாளைய லோக்சபாவில் கேள்விகள் எழாமல் இல்லை. “நேரு குடும்பத்துப் பையன்கள், இங்கு இல்லாத உயர் கல்வி பெற இங்கிலாந்துக்கு அனுப்பப் பெற்றிருக்கின்றனரா? சுதந்திர இந்தியாவில் இந்தத் தொழில் நுட்பக் கல்விப் பயிற்சிக்குக்கூட வாய்ப்பு இல்லையா?… இதற்கு மட்டும் அந்நியச் செலாவணி எப்படிக் கிடைக்கிறது?” என்று எதிர்க்கட்சியினர் குடைந்தார்கள்.

இக்கேள்விகளைச் சமாளிப்பது அப்போது கடினமாகவே இல்லை. நேருவின் புத்தக விற்பனையிலிருந்து பெறும் அந்நியச் செலாவணி பையன்கள் படிப்புக்குச் சரியாக இருக்கும் என்று காட்டப்பட்டது. ஆனால், இந்திரா கனவு கண்டாற்போல், பையன்கள் கல்வியிலும் திறமையிலும் பிரகாசித்தார்களா? குறிப்பாக சஞ்சய், அறிவியலிலும் ஆற்றலிலும் ஒழுக்கப்பண்பிலும் நேரு குடும்ப விளக்கை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் உருவானானா?

ராஜீவ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தான். சராசரி மாணவர்களைப் போல்தான் படித்தான். காதலும் வந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி பட்டம் பெறவில்லை. படிப்பை விட்டுவிட்டுத் தொழில் நுட்பம் பயில வேறு ஒரு தொழில் நிறுவனத்தில் சேர்ந்தான். அதிலும் ஓராண்டே நிலைத் தான். பட்டயம் ஏதும் பெறவில்லை. இதற்குள் சோனியா என்ற இத்தாலிய நங்கையின் காதலில் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான். இங்கிலாந்துக்கு வந்த தாய் தன் காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்தான். இந்திராவுக்குத் தம் மகனின் காதலியைப் பிடித்துப் போயிற்று. அவர்கள் காதலும் உறுதியாக இருப்பதாகவே நினைத்தார் என்றாலும் திருமணத்துக்கு அவசரப் படவில்லை.

ராஜீவ் அரசியலில் சிறிதும் ஈடுபாடு கொண்டிருக்க வில்லை. பல்கலைக்கழகத்திலும், மாணவரிடையேயும் வேறு