பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இந்திய சமுதாய... /ஆதித் தாய்

 கன்னியாகவே, அவள் விருப்பம் முகிர்த்து வராத அரும்பு நிலையில் தாயாக்கப்படுகிறாள். சத்தியவதிக்கு இருந்திராத சமூக அச்சம் குந்திக்கு வந்து விடுகிறது. பெண்ணின் தாய்மை, ஓர் ஆணுக்கு அவள் உரியவளாகாத நிலையில், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று என்ற நீதி அறிவுறுத்தப்படுகிறது.

பெண்ணின் கருப்பை இயக்கம்-தாய்மைக்கூறு, அவருடைய உரிமையில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் முதல் அடி இது. தான் தன் உடலின் ஒரு பகுதியாக வயிற்றில் வைத்து உருவாக்கிய சேயை, மார்போடு அனைத்துப் பாலூட்டிச் சீராட்டும் உரிமை, பச்சை இரணமாகப் பிரித்து எறியப்படும் இந்தக் கொடுமை, இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குந்தியே முதல் அடி பெற்ற ஆதித்தாய்.

இன்னமும் பாண்டுவின் மைந்தர்கள் - பாண்டவர்கள் என்று பொதுவாகக் குறிக்கப் பெற்றாலும் பார்த்தன் என்றும் கெளந்தேயன் என்றும் அருச்சுனன் மட்டும் தாயின் மகனாகவே சிறப்பிக்கப் பெறுகிறான். கர்ணன் - ராதை வளர்த்த பிள்ளை, ராதேயன் என்று அவள் மகனாகவே வழங்கப்படுகிறான்.

அதிதி - ஆதித்யர்கள்-கிருத்திகா-கார்த்திகேயன்-என்ற பெயர்களெல்லாம் தாயின் பெயரைக் கொண்டே வழங்கப் பெற்றிருக்கின்றன. எனவே, தந்தைநாயகம் இந்தச் சமுதாயத் துவக்க காலங்களில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வில்லை எனலாம். இது ஒரு வகையில் கலப்படமான காலத்தையே அறிவுறுத்துகிறது.

திருமணம் என்ற நிகழ்ச்சியை, கைபிடித்தல் என்று இன்றும் வழங்குகிறோம். ‘பாணிக்கிரஹணம்’ என்ற ‘கை பிடித்தல்’ திருமணச்சடங்கின் முதல் குறிப்பாக இன்றளவும் வழக்கில் இருக்கிறது. ஆணும் பெண்ணும் தங்களின் விருப்பத்தை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ள, கைப்பற்றிக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆச்வலாயன தர்ம சூத்திரம், திருமண விதிமுறைகள் பற்றிக்