பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை


மக்களிடையே, அவரைப் பற்றிய, மகனைப் பற்றிய பிம்பங்கள் கலைந்து கோரங்களாக அல்லவோ வெளிப்படும்?

ஆசை; ஆசையினால் அநீதங்கள்; அவற்றால் சமைக்கப் பட்ட பொய்கள் தகர்ந்து விடுமோ என்ற அச்சம்…

இந்த நிலை இந்திராவுக்கு எப்படி வந்தது? தான் ஒரு ஜோன் அஃப் ஆர்க் ஆகவேண்டும் என்று இளம்பருவத்தில் கனவு கண்ட அந்தப் பெண்மணிக்கா இந்த நிலை?

பிள்ளைப் பாசம் என்பது ஒரு பெண்ணுக்கு சாபக்கேடா?

இயல்பிலே ஓர் ஆதரிசவாதியாக முளைவிட்ட பெண், மகள் என்று வரும்போது தந்தையின் மேலாண்மைச் செல்வாக்கிலும், பின்னர் கணவர் என்று கடமைக்குக் கட்டுப் பட வேண்டிய மரபுணர்விலும், மகன் என்ற கண்ணில்லாப் பாசத்திலும் தன்னை முற்றிலும் இழந்து விடும் தன்மையையே காணமுடிகிறது.

இந்திரா பதவியிலிருந்து இறங்கவில்லை. அப்படி நியாய உணர்வுடன் அவர் செயலாற்றவே துணியாதவாறு மகனுடைய முரட்டுத் துணிச்சல் தடுத்துவிட்டது. அவர் தம் எதிர்காலத்தை முற்றிலுமாக அந்த மகனின் வசம் ஒப்படைக்கத் தயாராகி விட்டார் எனலாம். அதுவரை அரசியல் தருமங்கள் என்றிருந்த அடிநிலைகள் வேரோடு தகர்க்கப்பட்டன.

நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

ஜயப்பிரகாசர் உள்பட, சிலும்பியவர்கள், ஆமாம் சாமி போடாதவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோருமே இரவுக்கிரவாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.