பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

177


இந்திரா இந்த அனைத்து நடவடிக்கைகளையும் அநுமதிக்கும் கட்டாயத்துடன், அவன் செயல்களுக்கு நியாயம் சொல்ல வேண்டிய நிலையிலும் நின்றார்.

1980 ஜனவரியில் இந்திரா பதவிக்கு வந்தபின், வாரிசுக்கு ஓர் ஆண் என்று சஞ்சய்-மனேகாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ‘வருண்’ என்று பெயர் வைக்கப்பட்டது.

வாழ்க்கையின் இத்தகைய மத்தாப்பூச் சிதறல்கள், வானில் எழும்பிச் சென்ற வாணம்போல் வெடித்தது. 1980 ஜூன் மாதத்தில் உதிர்ந்து புகைந்து ஒன்றுமில்லாமலாகி விட்டது.

சுபாஷ் சக்ஸேனா என்ற விமானமோட்டியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு காலையில் சஞ்சய் கிளம்பிச் சென்றான். விமானமோட்டிச் சாகசம் செய்யும் விளையாட்டில் சஞ்சய் நிலைதடுமாறிக் கீழே வீழ்ந்து மாண்டான். குற்றமற்ற சக்ஸேனாவும் இந்த விபத்துக்கிரையானான். சஞ்சயின் இயல்பான முரட்டுத்தனமே இறுதியிலும் யமனாக வந்து முடித்தது.

இந்திரா இந்தப் புத்திர சோகத்தில் உருக்குலைந்தார். அதுவரையிலும் இந்திராவைக் கணவரின் மரணம் மட்டுமே பாதித்திருந்தது. சஞ்சய், மகன். அவன் பிறருக்குத் தறுதலை என்றாலும். தாயின் வீழ்ச்சிக்கும் மீட்டெழுதலுக்கும் காரணமாக நின்று, அவளை மகனை எப்போதும் சார்ந்து நிற்கும் தாயாக்கிவிட்டான். அவனை அவளுக்கு இன்றி யமையாத பற்றுக் கோடாகச் செய்திருந்தான்.

ஒரே நாளில் தான் முதுமையின் இயலாமைக்குள் குறுகிவிட்டதாக உணர்ந்தார் இந்திரா.

அறிவுக் கண்களும், ஆய்ந்து தெளியும் ஆற்றலும் பிள்ளைப் பாச மாயையில் மறைக்கப்பட, ஏதோ ஓர் இழுப்புப் பாதையில் வந்துள்ளார்.

இ-12