பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

33


எனவே கொற்றவை, தாய்ச் சமுதாயம் வீழ்த்தப்பட்ட காலத்தில் எழுச்சி பெற்ற மக்கள் தெய்வம் என்று கொள்ளலாம்.

தந்தை நாயகம், அதிதியைக் கச்யபரின் மனைவியாக்குகிறது. இங்கும் முருகனின் தாயாகிய கொற்றவை, சிவனின் மனைவியாக, உமா, காளி, மாதங்கி என்றெல்லாம் அறியப்படுகிறாள்.

சங்க இலக்கியத்தில், ‘மாதங்கி’ என்ற மரபினர் பற்றிய குறிப்பு வருகிறது.

விறலியர் எனப்படும் மக்கள், இசை, கூத்து ஆகிய மனங்கவர் கலைகளில் சிறந்த நாடோடிகளாவர். இவர்களை பாண்மகள், மாதங்கி என்றும் வழங்கக் காண்கிறோம்.

சிலப்பதிகாரத்தில், இந்திர விழாவை விவரிக்கும் பகுதியில் காணப்படும் கண்ணுளாளர் என்பார், மாதங்கர், பாணர், கூத்தர் என்றே அடியார்க்கு நல்லார் உரையில் விவரிக்கப்படுகிறார்.

இந்த நாடோடி மக்கள், அரசரைப் புகழ்ந்தும் வாழ்த்தியும் பல பிரதேசங்களிலும் திரிந்தனர். இவர்கள் மக்கள் கலைஞராக விளங்கியதுமன்றி நிமித்தங்கள் கணித்துச் சொல்லும் சோதிடராகவும் விளங்கினர். ஆண் நாயகத்துக்கு கட்டுப்பட்டிராத இந்தச் சமுதாயத்தினர் (ஆண் - பெண் உட்பட) கூத்தர்-விறலியர் குழுக்களாகத் திரிந்தனர் என்றும் கொள்ளலாம்.

செளதத்திக் குன்றில், ‘எல்லம்மை’க்கே தாசிகள் என்று தங்களை விளக்கிக் கொண்ட பெண்கள், தந்தையாதிக்கச் சமுதாயத்தினரால், ஒட்டு மொத்தமாகப் பரத்தையராக ஒடுக்கப்பட்டனர் என்பதே வரலாறு. பெண் தெய்வத்துக்குத் தாசியா?

‘ஆண்களுக்கு, ஆண் தெய்வங்களுக்குத் தாசியாகுங்கள்’ - என்று வீழ்த்தப்பட்டனர்.

இ - 3