பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

41


சூளுரைக்கும் காட்சியை முதன்மைப்படுத்தி, பாஞ்சாலி சபதம் என்ற ஒப்பற்ற காவியமாக்கினார்.

இந்தத் துரௌபதை, பஞ்சகன்னியரில் ஒருத்தியாகவும், இந்ததியக் கிராம தேவதையாகவும் வழிபடப் பெறுகிறாள். பாண்டவர் துணையில்லாத, தாய்த் தேவதையாக இவள் பாமரமக்கள் வழிபடும் தெய்வமாக விளங்குகிறாள். இவள் வழிபாட்டில், மக்கள் யாரோ செய்த கொடுமைக்குத் தாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்வதுபோல் உடலை வருத்திக்கொள்ளும் நேர்ச்சைகளை மேற்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டில் முக்கியமானது தீமிதித்தல்.

ஐவருக்கு நாயகியாக்கப்பட்டதே கொடுமை. அதற்கும் அப்பால், அவளை மானபங்கம் செய்யத் துணிந்த ஆணாதிக்கத்தை அவள் எதிர்த்துக் கேட்ட நிலையில், அந்த ஐந்து கணவர்களும் அவளைக் காப்பாற்ற இயலாத ஒரு தருமம் பாலிக்கப்பட்டது அதைவிடக் கொடுமை.

அவர்கள் விராட நாட்டில் ஒளிந்து வாழநேர்ந்தபோது துரௌபதை அரசமாளிகைப் பணியாட்டியாக ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. அங்கும் மகாராணியின் சோதரன் கீசகன் அத்துமீறல் அவளைச் சோதனைக்குள்ளாக்கியது. கீசகன் பீமனால் கொல்லப்பட்ட பிறகும், மன்னன் இறந்த பிறகு மன்னனுக்குப் பிரியமானதனைத்தையும், பிரியமான பெண்ணையும்கூட அவனுடன் எரிக்க வேண்டும் என்ற வழக்கத்துக்குட்பட்டு, அவளையும் அவனுடன் எரிக்க வேண்டும் என்ற தருமத்தையும் அக்காலம் முன்வைக்கத் தயங்கவில்லை. பிறகு அது நிறைவேற்றப்படவில்லை.

அநியாய ஆணாதிக்கத் தருமங்களை எதிர்த்துக் குரலெழுப்பிய சக்தி-எழுச்சித் தெய்வமாக இன்னமும் பாமர மக்களின் துரௌபதையம்மன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.