பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44

இந்திய சமுதாய.../சீதையின் கதை


சீதையின் நிமித்தமாக, பண்டைய வேட்டையாடி வாழும் வாழ்வின் சின்னமான வில்லே இராமனால் ஒடிக்கப் பெறுகிறது. சீதைக்கு, நிலவுடைமைச் சமுதாயத்துக்கு இன்றியமையாத கற்பொழுக்கம் வலியுறுத்தப்படுகிறது.

இராமகதையின் முக்கியத்துவமே, பெண்ணுக்குக் கற்பு என்றதோர் அணிகலத்தை நெறியாக்குவதில் மையம் கொண்டிருக்கிறது. பளிங்கு போன்ற கண்ணாடித் துண்டை மெழுகுபோல் அனலில் காட்டி, வளைப்பதுபோல், பெண்ணை ஆண் நாயகச் சமுதாயத்துக்கு உகந்தவளாக்கும் நெறியாக, ‘கற்பியல்’ முழுமையாக்கப்படுகிறது.

இராமாயணம் பிறந்த வரலாற்றைச் சிறிது கூர்ந்து நோக்கலாம். வால்மீகி முனிவர், கங்கையில் நீராடுவதற்காக, நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னே இரு அழகிய ‘க்ரௌஞ்ச’ (நாரை இனம்) பறவைகள் ஆணும் பெண்ணுமாக உலகின் தலையாய இன்பத்தில் மயங்கி இருந்தன. அப்போது ஒரு வேடன் அம்பெய்து, ஆண் பட்சியைக் கொன்று விட்டான். பெண் பறவை பரிதாபத்துக்குரிய குரலில் துடிதுடித்து வீழ்ந்த காட்சியே கவி இதயத்தில் பதிந்து பாதிப்புக்குள்ளாக்கியது. இந்த மாபெரும் காவியத்தை இயற்ற, உள்ளார்ந்த கிளர்ச்சி பொங்கி வர அதுவே காரணமாயிற்று.

காதல் என்ற உன்னதமான ஆண்-பெண் தொடர்பு, வெறும் உடல்பரமானதல்ல. கூடல் தலையாய இன்பம் என்றால், பிரிதல் உலகத்துச் சோகங்களனைத்தையும் உள்ளடக்கியதாகும் என்று கூறப்படுகிறது. ஆண் பறவை வீழ்ந்ததும், பெண் வேறு துணை நாடியோ, விடுபட்ட நிலையிலோ பறந்து செல்லவில்லை.

இராமன்-சீதை பந்தம், முன் எப்போதும் சமுதாயத்தில் இருந்திருராத வகையில் ஆண்-பெண் தொடர்பாக வரையறுக்கப்படுகிறது. கற்பென்னும் நெறிக்கு இதுவே அடி நிலையாகிறது.