பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இந்திய சமுதாய... /கடவுளின் மணவாட்டி


இல்லா விட்டாலும் அவள் மாற்றானை நாடலாகாது. இந்த விதியை அவள் மீறினால், குலத்தில் இருந்து விலக்கப் படுவாள். இவள் திருமணமாகாத கன்னியாக இருந்தாலும் கூட ஒருவனை முறையின்றிச் சேரலாகாது. அப்படி நடந்து கொண்டால், அவள் குலத்திலிருந்து விலக்கப்படுவது மட்டுமின்றி, அவளைச் சேருபவர்கள் எவரும் பணம் கொடுத்துப் பெறலாம். உடலின்பத்துக்கு விலை பெற்று என்றென்றுமாக வெட்கக் கேட்டுக்கும் அவமானத்துக்கும் உரியவளாக அவள் வாழ்வாள்”. கணவன்-மனைவி என்ற உறவில், ஆணின் ஆதிக்கத்தைப் பெண் பொறுத்துத்தானாக வேண்டும். இல்லையேல் சபிக்கப்படுவது உறுதி என்ற அவலத்தை விள்ளுகிறது இந்தப் புராண வரலாறு. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நியாயம் என்று அவர்களையே கருதச் செய்யுமளவுக்கு அவர்கள் மனங்களை மெழுகுபதத்தில் வளைத்து முடமாக்க எத்தனை புராண நீதிகள்?

மத்ஸ்ய புராணம் கூறும் வரலாறு இது.

ஒருமுறை பிரும்மா சிவனிடம் விலைமகளிருக்கான ஏதேனும் காரணமும் நெறிகளும் உள்ளனவா என்று வினவினாராம். சிவன் கூறிய வரலாறு கண்ணனையும் அவனைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கோபிகைகளையும் மையமாக்கியது. ஒருமுறை, வசந்த காலத்தில், குயில்கள் கூவும் மாந்தோப்பில், தாமரைக் குளத்தருகே கண்ணன் தன் மனைவியருடன் மதுவுண்டு ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தான். அப்போது, அந்தப்பக்கம் ‘சம்பா’ என்ற வலிய தோற்றமுடைய காட்டான் சென்று கொண்டிருந்தான். மனைவியரின் கவனம் அவன் மீது சென்றது.

கண்ணன் அது கண்டு வெகுண்டு, ‘நீங்கள் கொள்ளையரால் கற்பழிக்கப்படுவீர்கள்! பிறகு அடிமைகளாக உழல்வீர்கள்!’ என்று சபித்தான்.