பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



60

இந்திய சமுதாய... /கடவுளின் மணவாட்டி


பெண் கண் விழித்த நேரத்தில் இருந்து, ‘இந்த உடல் தான் உனக்குச் சொத்து; இதை வைத்துக் கொண்டு நீ மேலும் பொன்னும் பொருளும் போகமுமாக வாழ்வதே இலட்சியம்’ என்று அறிவுறுத்தப்படுவாள்.

தாயாகி, குடும்ப நிழலில் ஒருவனுக்கு மட்டுமாகப் பெண்டாக இருக்கும் உரிமையின்றி எத்தனை பெண்கள் புழுங்கிச் செத்திருப்பார்கள்? உடலை விற்பவள் பாவி என்று சொல்லிக் கொண்டே உயர் வருக்கம் அந்த உடலை உறிஞ்சி உயிர் குடித்தது கேட்கப்படவேயில்லை. ‘உங்களில் பாவம் செய்யாதவர் எவரோ அவரே இந்தப் பெண்ணின் மீது கல் எறியலாம்’ என்ற வாசகம், எவ்வளவு உண்மையானது? ஆனாலும் அந்த உண்மையை மறைத்துக் கொண்டு, உடலால் கெட்டவள் பாவி, பாவி என்று உலகம் இன்னும் கல்லெறிந்து கொண்டு தான் இருக்கிறது. புராண மரபுகள் பெண்ணின் விஷயத்தில் சிறிது கூட மங்காமல் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன. டாக்டர் முத்துலட்சுமி அம்மை, இந்த மரபுகளை அழிக்கப் படாதபாடுபட்டார். இவருக்கு உயர்கல்வி கற்பதும் ஓர் அறை கூவலாக இருந்தது. முதல் மருத்துவப் பட்டதாரி என்ற அறிவுப்படியில் வெற்றிக் கொடியுடன் அடிவைத்தார். மேல்நாடு சென்று மருத்துவக் கல்வியில் இன்னமும் விரிவு கண்டதுடன் சமூக இயலில் தன்னை முழுமையாக்கிக் கொண்டார். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்’ எங்களுக்குரியதே என்று பாரதியின் வாக்கை நிரூபித்தார். அந்தக் காலத்தில் ‘தேசிய’த் தீவிரவாதி என்று பெயரும் புகழும் பெற்ற தலைவர்கள்தாம் பெண்களின் சமூக முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள் என்றால் வியப்பாக இல்லை?

ஆங்கில அரசு காட்டிய அக்கறையைக் கூட இந்தத் தேசியத் தலைவர்கள் எதிர்த்தார்கள். திலகர் தம் மகளுக்குச் சட்டத்துக்கு உட்பட்ட இளம் வயதில் திருமணம் செய்தார். ‘தேவதாசி ஒழிப்பு’ வரக்கூடாது என்று கங்கணம்