பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இந்திய சமுதாய... /துணை இழப்பும் துறவறமும்


‘விதவா’ என்ற சொல்லுக்கு மாறான ‘அவிதவா’ என்ற சொல்லும் இதே பத்தாவது மண்டலத்தில் (X-2-2) இடம் பெற்றிருக்கிறது. ‘விதவா’ என்ற சொல், நான்காம் மண்டலத்திலும் (IV-2-8) இடம் பெற்றிருக்கிறது.

இன்றைய சமுதாயத்தில், விதவை என்ற சொல்லுக்கு நேர் எதிர்ப்பதமாக, சுமங்கலி என்ற சொல் விளங்குகிறது. ‘சுமங்கலி’ என்றால், அவள் பூவுக்கும், பொட்டுக்கும், பட்டுக்கும் உரியவள். அவள் உடலையும், கருப்பையையும் ஆளுகை செய்யும் நாயகன் இருக்கிறான் என்பதே பொருள். திருமண வைபவங்களில், மணமகள், மணமகனைப் பணியும் போது, அவன் அவளைத் ‘தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்’ என்று வாழ்த்துவதன் மூலம் தன்னையே வாழ்த்திக் கொள்ளும் வழக்கம் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

ஆனால், ருக்வேதம் காட்டும் இச்சொல், அவளைத் திருமணம் புரிந்த நிலையில், ஒருவனுக்கு ஆட்பட்ட தாலி, பொட்டு பூ என்று புறச்சின்னங்களோடு தொடர்பு கொண்டதாகக் குறிக்கப்படவில்லை. இந்தப் பாடல் ஸவிதாவின் மகளான சூரியா, சோமனைத் திருமணம் செய்து கொள்ள மணப்பெண்ணாகக் கூடத்தில் வந்திருக்கிறாள். இவளை மணமகன் வீட்டுக்கு அழைத்துச்செல்ல அசுவினி தேவர்கள் தேருடன் காத்திருக்கின்றனர். அந்தத் தருணத்தில், இந்தப் பாடல் கூறப்படுகிறது.

‘ஓ இந்த வது சுமங்கலியாகத் திகழ்கிறாள், பாருங்கள்! இவளை வந்து வாழ்த்தி விட்டுத் திரும்பிச் செல்லுங்கள்!’ என்று உற்றவர், ஊராரிடம் சொல்வதான பாடல் அது.

‘இந்த வது (மணப்பெண்) மங்களமான உறுப்புகளையுடையவளாய், இளமையும், ஆரோக்கியமுமாகத் திகழ்கிறாள். இவள் சந்ததியைப் பெற்றுத்தந்து இல்லத்தைப் பரிபாலிக்கும் தகுதியுடையவள் என்ற பொருள்தான் இப்பாடலில் முன்நிற்கிறது.