பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இந்திய சமுதாய... /நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்


ஆண் பக்தர்கள். இத்தகைய கற்புக் கோட்பாட்டுக்குள் புழுங்க வேண்டியதில்லை. ஒரே ஒரு நாயகன் - புருஷோத்தமனான காதலனை எண்ணி, உருகி உருகிப் பக்தி செய்து பாடலாம். இறைவனுடன் கூடல் வேண்டி, தங்களைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டுத் திரியலாம். தடையில்லை. பெண் அவ்வாறு உணர்ச்சி மிகுந்து பக்தியில் கனிந்து பாடும்போது, ஒரு வகையில் தன் கூட்டுக்குள்ளிருந்தே புரட்சிக் குரல் கொடுப்பதாகக் கருத வேண்டி இருக்கிறது.

இந்திய மொழிகள் அனைத்திலும் பக்தி இலக்கியத்தைச் செழுமைப் படுத்திய சான்றோர் பலர் தம் பாடல்களாலும் காவியங்களாலும் அழியாப் புகழ் பெற்றிருக்கின்றனர்.

தமிழில் சிவபக்தச் செல்வர்களான நாயன்மார்களும் வைணவ பக்தர்களான ஆழ்வார்களும், இஸ்லாம் வளர்த்த இறையடியார்களும், கிறிஸ்தவம் சார்ந்த சான்றோர்களும், பக்தி இலக்கியங்களுக்கு உரியவர்களாகத் திகழ்கின்றனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் காரைக்கால் அம்மையார் இடம் பெற்றுள்ளார். தமிழில், பக்தி இலக்கியம் என்று வரும்போது, முதலாவதாகக் குறிப்பிடப்படும் பெண்பாற்புலவர் இவர். இவருடைய அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை, மூத்த திருப்பதிகங்கள் ஆகியவை பதினோராந்திருமறையில் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக, பெண்களுடைய வெளிப்பாடாக ஒர் இலக்கியம் உருவாகும்போது, அது உடல்பரமான உணர்வுகளைச் சார்ந்தே முகிழ்க்கிறது என்பது ஓரளவு உண்மையாக இருக்கிறது.

ஆனால் காரைக்காலம்மையின் பாடல்களை அப்படிச் சொல்வதற்கில்லை. ‘காரைக்கால்’ என்ற ஊர்ப் பெயரைச் சேர்ந்தவளாகக் குறிக்கப்பெறும் இவ்வம்மையின் இயற் பெயர் புனிதவதி.