பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இந்திய சமுதாய... / நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்


இவள் பேயுருவாகவே, தலையால் நகர்ந்து திருக்கயிலையை அடைந்தாள் என்றும், இறைவன் இவளை ‘அம்மையே’ என்றழைத்து அருளினான் என்றும் வரலாறு, அறிவுக்கு ஒப்பாத அற்புதமாகவே விரிக்கிறது.

இவருடைய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி - இரட்டை மணி மாலை, திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகம் - மூத்த திருப்பதிகம் - என்பவை. இவற்றில், யாக்கை விடுத்து, சுடுகாட்டில் நடமிடும் சிவனின் பேய்க் கணங்களில் ஒன்றாகிக் களிப்பதான ஓர் இலட்சிய முனைப்பும், அந்த வெற்றியும் தவிர, வேறு, உலகியல் சிந்தனைகளோ, வாழ்க்கை பற்றிய குறிப்போ இல்லை.

ஒரு சாதாரணமான பெண், வெளி உலகம் தெரியாத கற்புடைய மனைவி, பக்தி உணர்வால் மட்டுமே, மொழியிலும், இலக்கிய அறிவிலும் இப்பாடல்களைப் புனைந்தார் என்பதும் நூற்றுக்கு நூறாக ஒப்புவதற்கில்லை.

மொழிப்பயிற்சி, புலமை, சிவனடியார் சங்கம், ஆன்மிகக் கருத்துக்களின் பரிசயம் இவை முற்றிலுமாக வரலாற்றில் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் வெளியீட்டில், குடும்பம், கணவன், மக்கள், சமையல், என்ற அன்றாட வாழ்வின் பிரதிபலிப்புத்தான் முதன்மை பெறுவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது.ஆண்டாள், அக்கமா தேவி, மீராபாய் ஆகியோரின் பாடல்களில், பெண்களுக்கே உரிய இந்த இயல்புதான் இறைவனின் மீதான ஆறாக்காதலாக, வெளிப்பட்டிருக்கின்றன.

வேதப்பாடல்களைப் பார்த்தாலும், பெண்ரு ஷிகாலோபமுத்திரை, எத்தனை காலம் நான் தவம் புரியும் முனிகணவருக்குத் தொண்டாற்றினேன்! எனது இளமை போய் முதுமை வந்தெய்தியது! கணவன் மார்களே! உங்கள் சந்ததிக்காக வேனும் தவநிலையை மீறி மனைவியை அணுகுங்கள்? என்ற தவிப்பாகத்தான் வெளிப்படுகிறது.