பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


செய்முறைசாய்ந்த எழுத்துக்கள்

முதல் நிலை: நேர்த் தண்டாலுக்குரிய இரண்டாம் நிலையான உடலைத் தரைக்கு இணையாக உள்ளங் கைகளிலும் முன் பாதங்களிலும் இருத்தி இருக்கின்ற முறையில், முதலில் இருக்க வேண்டும்.

இப்பொழுது விறைப்பாக நீட்டப்பட்டிருக்கும் கால்களிலும், உறுதியாக ஊன்றப்பட்டிருக்கும் கை ஆதரவிலும், உடல் இருக்கிறது.

இரண்டாம் நிலை: உள்ளங் கைகளுக்கிடையில் நெஞ்சுப் பகுதி இருக்க, முழங்கைகள் இரண்டும் மடிந்திருக்க, தரையில் படாமல் உடல் இருக்கும் நிலையில் இருந்து ஒருகாலை மட்டும் மேல் நோக்கித் தூக்கி நிறுத்தவேண்டும்.

அது இடது காலாகவும் இருக்கலாம். அல்லது வலது காலாகவும் இருக்கலாம். ஆனால் உயர்த்தப்படும் கால், வளைவில்லாமல் நிமிர்த்தி விறைப்பாக நீட்டப்படுதல் வேண்டும். அவ்வாறு நிமிர்த்திய கால் தேளின் வால்போல் தோன்றும்.

பிறகு அங்கிருந்து முன்னிருந்த இடத்திற்கு அந்தக் காலைக் கொண்டுவந்து, மறுகாலை மேலேதுக்கி உயர்த்தவும். இவ்வாறு மாற்றி மாற்றி காலை மேலே உயர்த்தவும்.

குறிப்பு: எக்காரணம் கொண்டும் நெஞ்சுப்பகுதி தரையைத் தொடக் கூடாது. காலை உயரே தூக்கும் பொழுது, உடலில் எடை முழுவதும் கைகளில் வந்து விழும். அப்பொழுது கவனமில்லாமல் இருந்து விட்டால் கைகள் எடையைத் தாங்காது மடங்கிக் கொள்ள, முகம்தரையில் மோதிக்கொள்ள நேரிடும்.