பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறந்தது. எனவே இக்கருத்துக்கள் ஆத்திக முற்கால கருத்துக்கள். இவை நாத்திகமன்று.
வேதச் சிந்தனைகள் வளர்ச்சி பெற்று ‘ஒரு கடவுள்’ கொள்கை தோன்றியது. இதற்குக் காரணம் இனக்குழு அமைப்புகள், அழிந்தும், அழிக்கப்பட்டும் அரசுகள் தோன்றியதே. அரசு மக்களை ஒரு வர்க்கத்திற்கு வன்முறையால் பணிய வைக்கும் கருவி. அது மக்கள் மனத்தைப் பணியவைக்கச் சமயங்களைத் துணையாக நாடிற்று. மனத்தில் 'பல கடவுளர்' (Polyheism) பக்தி இருந்ததை ஒரே கடவுளாக மாற்ற அது தத்துவத் துறையில் முயற்சி செய்தது. இது ஒன்றேதான் ஒரு கடவுள் வணக்கம் தோன்றக் காரணம் என்று நான் கூறவில்லை. அரசுகள் தோன்றிய பகுதிகளில், ஒரே கடவுள் வணக்கமும் தோன்றியது.
ரிக்வேதம் 1,000 செய்யுள்கள் கொண்ட ஒரு தொகை நூல். ஒவ்வொரு செய்யுளின் காலமும் இன்னும் ஆராய்ச்சியால் அறியப்படவில்லை. ஆயினும் வேதப்பாடல்களின் உள்ளடக்கத்தைக் கவனித்தால் அவற்றின் வளர்ச்சிமுறைப் போக்கை நம்மால் அறிய முடியும். வேதங்களின் துவக்க காலத்தில் பல்வேறு இயல்புகள் உடையதாக நம்பப்பட்ட பல்வேறு தேவதைகள் வணக்கத்திற்குரியனவாக இருந்தன. இவற்றிற்கு ஆன்மீக முக்கியத்துவம் இல்லை. பண்டமாற்று விவகாரம் போல சில கொடைகளை மனிதர்கள் தெய்வங்களுக்குக் கொடுத்து, சில வரங்களைப் பெற முயன்றார்கள். மாபெரும் ஆற்றல், இத்தேவதைகளுக்கு இருந்ததாக அவற்றை வணங்கும் மக்கள் நம்பவில்லை. இவ்வேதங்களிலேயே, இத்தேவதைகள் முக்கியத்துவம் இழந்து ஒரு தெய்வ நம்பிக்கை தோன்றுகிற கட்டத்தைக் குறிக்கும் பாடல்களும் உள்ளன. ‘ஒரே கடவுள்’ நம்பிக்கை ரிக்வேதச் செய்யுள்களிலேயே முழு உருவம் பெற்றதா என்ற கேள்வி முக்கியமானதல்ல. ரிக்வேதத்தில் இந்த மாற்றத்துக்குரிய முன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிற நிலைமைகளே வேதப் பாடல்களின் உள்ளடக்கத்தின் வளர்ச்சிப்போக்கு குறிப்பிடுகிறது.