சீர்காழி சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரனென்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலம்கொள் கோயில் வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண் காட்டும் கழுமலமே. "விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவடியே சரண் என்று நினைத்து மிகுந்த அன்போடு, நாவில் வாழும் கலைமகளோடு நான்முகன் வழிபாடு செய்த நன்மை மிக்க கோயில் (எதுவெனில்) குளங்களில் உள்ள வளப்பம் பொருந்திய தாமரைகள் முகங்களையும், செவ்வல்லிகள் வாய்களையும், குவளை, நெய்தல் ஆகிய மலர்கள் கண்களையும் நினைவூட்டும் முறையில் மலரும் கழுமலமே ஆகும்.” (சே-இடபம்; நா இயலும் மங்கை-கலைமகள்; வாவி-குளங்கள்; வண்கமலம்- வளப்பம் பொருந்திய தாமரை, செங்குமுதம்- செவ்வல்லி) கழுமலம்- தன்னை வணங்கியவர்களின் வினையை (மலத்தை)ப் போக்கும் ஊர் ஆதலால் இப்பெயர் பெற்றது.