திருவலஞ்சுழி இப்பதிகம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருவலஞ்சுழி என்ற ஊரின்கண் பிள்ளையார் பாடியதாகும். என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னைநீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி ஆதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே "நெஞ்சே! என்ன புண்ணியம் செய்தாயோ! பெரிய கடலால் சூழப்பட்ட இப்பூவுலகின்கண், முன்னர் நீ செய்த நல்வினையின் பயனாக, நவமணிகளையும் முத்துக்களையும் தன்னிடத்தே பெற்றுள்ளதும், என்றும் நிலை பெற்றுள்ளதும் ஆன காவிரி நதியால் சூழப்பட்டுள்ள திருவலஞ்சுழி என்னும் ஊரின்கண் உள்ள இறைவனை, வாயாரப் பாடி, மனத்தால் ஆதரித்து, அவன் புகழை ஏத்திப் பாடி வழிபாடு செய்கின்ற காரணத்தால் (என்ன புண்ணியம் செய்தாயோ' (இருங்கடல்-பெரிய கடல்; வையம்- இவ்வுலகம்; முழு மணி-நவ மணிகள்; தரளங்கள்- முத்து; மன்னு- என்றும் நிலைபெற்றுள்ள வாயாரப் பன்னி. பலமுறையும் வாயாரப் பாடி)