பக்கம்:இன்னொரு உரிமை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரம்புமீறிகள் 141

“கவலைப்படாதம்மா... நாம் கும்புடுற தெய்வம் அவனைக் கவனிச்சுக்கும்.”

“தெய்வமுன்னு இருந்தால் முதல்ல அது ஒங்களைத் தான் கவனிக்கும். எப்படியோ பன்றிக்குட்டிமாதிரி பெத்துப் போட்டுட்டிங்க! பன்றியாவே இருக்கச் சொல்றீங்க, ஆனால், என்னால... என்னால.”

இசக்கியா பிள்ளைக்கு மகளின் விசும்பல் சத்தமும், அதற்குப் பதிலாக மனைவியின் விக்கல் சத்தமும் கேட்டன. அதன்பிறகு மெளனம். “நீங்களே கேளுங்க. நான் பாடும் பாட்டைக் கேளுங்க” என்று அத்தனை படங்களையும் அனுசரணைக்காய்ப் பார்த்தார். பிறகு பத்மாசனம் போட்டார். அந்தப் பளிங்குக்கல்லின் மத்தியில் படங்களை மறைக்காமல் உள்ள சின்ன குத்துவிளக்கை ஜோதியாக் கினார். ‘ராமலிங்காய’ என்று சொல்லிக்கொண்டே இதயத்தில் இருந்து, தொண்டைக் குழியில் தெறித்து, காதில் விழுந்த சுயம்பு வார்த்தைகளைத் தனக்குள்ளேயே கேட்டார்.

எச்சோதனையும் இயற்றா தெனக்கே...
அச்சோ ஏற்றருள் அருட்பெருஞ் ஜோதி.

இசக்கியா பிள்ளை வள்ளலார் அருளிய அருட்பெருஞ் ஜோதி அகவல் புத்தகத்தை எடுத்தார். திருவடிப் புகழ்ச்சியை ஓதிவிட்டு அகவலைப் படித்தார். ஐம்பூத இயல்வகை, மண்ணியல், நீரியல், தீயியல், காற்றியல், வெளியியல், அகப்புறம், ஐம்பூதக் கலப்பு, வெளிவகை, அண்டப்பகுதி, கடல்வகை, மலைவளம், வித்தும் விளைவும், ஒற்றுமை, வேற்றுமை, ஆண் பெண் இயல், காத்தருள் வேண்டுதல் போன்ற பாக்களைப் பாடல்களாக்கினார்.

மீண்டும் தாய் மகள் யுத்தம் தொடங்கியதால் அவரால் தொடர முடியவில்லை. காது கொடுத்துக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/150&oldid=1369548" இலிருந்து மீள்விக்கப்பட்டது