பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

பிறந்தானோ ஆன ஒரு வாலிபன் கண்டவுடன் மனம் நொந்து துடிக்கிறான். மேற்சொன்ன இரு வகையினரும் வாலிபர்களே; அவர்கள் கண்டதும் ஒரே காட்சியைத்தான். ஆனால், அது ஒருவனுக்கு இன்பமாயும், மற்றொருவனுக்குத் துன்பமாயும் தோன்றின. மற்றப் புலன்கள் வாயிலாயும், இவ்விதமாகவே தோற்றங்கள் ஏற்படும். எனவே, இதைத்தோற்றமென்றல்லாது, வேறென்னவென்று கூறமுடியும்?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளைப்போல, வெளியிலிருந்து இன்ப துன்பங்களை நுகர்ந்து காட்ட , அறிவுக்கு எங்ஙனம் அமைப்புள்ளது என்ற சங்கை உண்டாகலாம். ஒரு ‘டைனமோ’விலிருந்து உற்பத்தியாகும் ‘கரன்ட்’ நேராகவோ அன்றி ஒரு பேட்டரி மூலமாகவோ ஒரு விளக்கை எரிக்கிறதும்; டைனமோ இல்லாமலே ஒரு பேட்டரி முன்பு, டைனமோவிலிருந்து சேகரித்து வைத்திருந்த ‘கரன்ட்’டினாலேயே ஒரு விளக்கை எரிக்கிறதும் கண்டுதானே? அதைப் போலவே அறிவும், மற்ற ஐம்புலன்களிலிருந்தும் சேகரித்து வைத்திருக்கும் உணர்ச்சிகளை, உண்ணும்போது எண்ணத்திற்குத் தோற்றமளித்து இன்ப துன்பங்களை உண்டாக்குகிறது. இவை தான் எண்ணும்போது ஏற்படும் இன்பதுன்பங்களாகின்றன.