பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

செவியிலே பாய்ந்து அங்கத்தைக் குறிவைத்தது. என் எதிர்ப்பட்டது அழகு லோகம்-இயற்கை எழில் இன்ப ஊற்று. ஆகா இன்பம் இன்பம் என்கிறார்களே அதை நான் இதோ காண்கிறேன். அழகிலே உருவாகிற்று இன்பம் என்று மாடிச் சாளரத்தின் வழியே, அஸ்தமனக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த எனக்கு என் உள்ளம் எடுத்துச் சொல்லியது. இன்பத்திலே, மூழ்கியிருந்த என் கண்களை அந்த நேரத்தில் யாரோ பொத்தினார்கள், எழுந்தேன், கலகலவெனச் சிரித்தாள் கமலா. இன்பம் என்னை எல்லையில்லா உயரத்திற்குத் தூக்கிச் சென்றது. பேச முடியவில்லை. மெளனமாகிவிட்டேன்.

சிற்றுண்டி கூடச் சாப்பிடாமல் சன்னல் ഖழியாக யாரைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றாள் அவள்.

உன்னைத்தான் என்றேன். என்னையா? வேடிக்கைதான். என்னைப்போல யாராவது அங்கு உலாவுகிறார்களா? தெரிந்தது விஷயம் என்று குறும்புடன் கூறினாள்.

ஆம், உலாவுகின்றனர். அதோ பார், நீல நிறவானம், அந்திப் பகலவனின் ஒளி, ஆற்றிலே ஓடும் நீர், பச்சைப் பசேலென்ற மாமரச்சோலை, அத்தனையும் சேர்ந்த அழகு வடிவம் நீ. உன்னைத் தான் கண்டேன். அங்கே, ஆம், கமலா உண்மையாக,