108
இன்ப வாழ்வு
காலம் கடந்து வருவீர்களாயின் இங்கு என்னைக் காணலரிது; வேறொரு மடந்தையை மணக்க வேண்டி வரும்; நினைவிருக்கட்டும். என்று வற்புறுத்தினாள். அவனும் அங்ஙனமே ஒத்துக் கொண்டவனாய்ப் பொருள் நோக்கிப் புறப்பட்டான்.
வேற்றுநா டடைந்த தலைமகன் அறவழியில் பொருள் ஈட்டலானான். எண்ணியபடியே திரண்ட செல்வம் குவிந்தது. வந்த வேலையும் முடிந்தது. தலைவியிடம் குறித்து வந்த கார்காலமும் எட்டிப் பார்த்தது. மேகக் கூட்டங்கள் மின்னலாலும் இடியாலும் துளியாலும் பருவ வரவை அவனுக்கு உணர்த்தின. தன் கடமையை உணர்ந்தான். கார்காலத்தில் தலைவியை அடையாவிடின் அவள் இறந்துபடுவாள் என்ற நினைவு வருத்தியது. எனவே தனக்குள் பின்வருமாறு பிதற்றலானான்:
‘யான் தலைவியிடம் குறித்துவந்த பருவமோ நெருங்கிவிட்டது. யானோ இன்னும் இங்கேயே உள்ளேன். தலைவி தங்கியிருக்கும் நம்முரோ நெடுந்தொலைவில் உள்ளது. அவ்வூரை அடைதற்குரிய வழியும் கரடுமுரடான கடுமை வாய்ந்தது. அவ்வழியில் எளிதாக விரைந்து செல்லவும் முடியாது. ஆனால் யான் குறித்த காலத்தில் தலைவியை அடையத் தவறினாலோ அவள் இறந்து படுவாள் என்பது உறுதி. தலைவியை விரைந்தடைவது எங்ஙனம்? என் நெஞ்சுக்கிருக்கும் விரைவை என்னென்று எடுத்துரைப்பேன்!”
“ஒரு வயல் - நல்ல பாங்குடையது. இப்போது மழை பெய்யப்பட்டு ஈரமும் பெற்று உழுதற்கேற்ற