பக்கம்:இன்ப வாழ்வு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

139


(ஒண்மை = அழகு, நுதல் = நெற்றி; ஞாட்பு = போர்; நண்ணார் = பகைவர்; உட்குதல் - அஞ்சுதல் - நாணுதல்; பீடு = பெருமை, வலிமை.)

இக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை வருமாறு:

போர்க்களத்து வந்து நேராத பகைவரும், நேர்ந்தார் வாய்க் கேட்டஞ்சுதற் கேதுவாய என் வலி, இம் மாதர தொள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது.

(ஆராய்ச்சி விரிவுரை) ஆசிரியர் இந்தக் குறளில் உயிர் இயல்புகளுள் ஒன்றினைப் பிழிந்து வைத்துள்ளார். இக்குறளைப் படிக்குங்கால், அந்தக் கருத்தே நெஞ்சை அள்ளுகிறது. உயிர்களின் உள்ளத்து இயல்பை இங்கே ஒளிப்பதில் பயனில்லை. காலனுக்கும் அஞ்சாத கடுங்கண் மறவர்கள்கூட கருத்துக்கினிய காதல் நல்லாரிடம், வறுக்குஞ் சட்டியில் இட்ட வெண்டைக்காய்போல வாடி வதங்கிச் சுருண்டு மடங்கிவிடுகின்றனரே! பறவை, விலங்குகளிடமும் இவ்வியல்பைக் காணலாம். இஃதோர் உயிரியல்பு. இனஊக்கங்களுள் ஒன்றாகக் காதல் ஊக்கம் (Mating) என உளநூலார் இதனைக் குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத்தக்கது. போர்க்களத்தில் பகைவர்களையெல்லாம் கலங்கச் செய்யும் பேராண்மையுடைய ஒரு தலைமகன் ஒரு பெண்ணின் நெற்றியழகுக்கு உடைந்தே போன எளிமையை என னென்பது! அலுவலகத்தில் ஆரவாரஞ் செய்கின்ற ஐயா, அடுப்பங்கரையில் அம்மாவிடம் அடக்கந்தான்’ என்று உலகியலில் பேசப்படுவதும் இந்தக் கருத்தைத் தழுவியது தானோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/140&oldid=550712" இலிருந்து மீள்விக்கப்பட்டது