பக்கம்:இன்ப வாழ்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

23


புரட்டினாலும், ஒருவனுக்கு ஒருத்தியே - ஒருத்திக்கு ஒருவனே; இவர்கள் உடலால் வேறுபட்டிருப்பினும், உள்ளத்தால் - உயிரால் ஒன்றுபட்டவராய் என்றும் இணைந்து இன்பமாய் வாழவேண்டும் என்று அறிவிக்கும் குறிப்பினைக் காணலாம். இதனைத் தமிழிலக்கியம் கற்றவர் ஐயமின்றி அறிவர் - நம்புவர். இதனை மேலும் வற்புறுத்துவதற்காகவே "இன்ப வாழ்வு” என்னும் இக் கட்டுரை நூலும் எழுந்தது.

ஈண்டு இன்னொரு செய்தியும் இன்றியமையாததாய் நினைவுகூரத் தக்கது. தமிழ்நாட்டில் இடறிவிழுந்தால் இன்ப இலக்கியங்களின் மேல்தான் விழவேண்டும் என்னும் நிலையிலிருந்தும், இந்த இன்பத்துறையை இடையிடையே இழித்தும் பழித்தும் சாடிப் பாடியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இவர்கள் கையாண்ட முறை கண்டிக்கத் தக்கது - இப்படியொரு நிலை ஏற்பட்டது வருந்தத்தக்கது; அதாவது, இவர்கள் ஆண் பெண் கூட்டுறவையே கண்டிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் எப்படிப் பிறந்தார்களோ தெரியவில்லை! அதோடுகூட இவர்கள் பெண்களை இழித்துப் பேசத் தொடங்கிவிட்டனர். பெண்கள் மயக்கும் மாயப் பொம்மைகளாம் - கலக்கும் காமப் பெட்டகங்களாம்! இன்னும் நினைக்கவும் கூசுகின்ற சுடுசொற்களால் மடந்தையரைச் சுட்டுத் தள்ளினர்.

இஃதென்ன விந்தை! காம உணர்வுக்குப் பெண்டிர்தான் காரணமா? ஆண் இன்றிப் பெண்கள் மட்டும் எவ்வாறு காமத்தை வளர்க்க முடியும்? ஆண்களிடம் நெறியும் நேர்மையும் இருந்தால் பெண்கள் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/24&oldid=514720" இலிருந்து மீள்விக்கப்பட்டது